சீனாவில் தமிழ் வானொலி நிலையம்: திருக்குறளை பரப்புகிறது

இந்தியா – சீன நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயிலான மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்பினை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

 இந்நிலையில் சீன அதிபரின் தமிழக வருகையின் இந்த தருணதில் தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் பலரும் சிலாகித்துப் பேசி வருகின்றனர். ஆனால் கடந்த 56 ஆண்டுகளாக சீன வானொலி நிலையம் தமிழிலும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருவது தமிழகத்தில் பெரும்பான்மையினர்களுக்கு தெரியாது.

சீன வானொலி நிலையம் 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய ஒலிபரப்புச் சேவை ஆகும். தற்போது 43 மொழிகளில் ஒலிபரப்பப்பினை வழங்கி வரும் சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 01.08.1963ல் தொடங்கப்பட்டது.

தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகம் நிறைந்த இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் 30 நிமிடங்களே நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிவந்த சீன வானொலியின் தமிழ் சேவை தற்போது ஒரு மணி நேர வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து நான்கு மணி நேர ஒலிபரப்புச் சேவையை வழங்குகிறது.

இந்திய நேரப்படி தினந்தோறும் இரவு 7.30 மணி முதல் 8.30 வரை ( 22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ் மற்றும் 25.67 மீட்டர்—11685 கி.ஹர்ட்ஸ் அலைவரிசைகளிலும்) இரவு 8.30 மணி முதல் 9.30 வரை (25.67 மீட்டர்—11685 கி.ஹர்ட்ஸ் மற்றும் 30.96 மீட்டர்—9690 கி.ஹர்ட்ஸ் அலைவரிசைகளிலும்) ஒலிபரப்பாகிறது.

மீண்டும் மறுநாள் காலையில் 7.30 முதல் 8.30 வரை (19.66 மீட்டர்—15260 கி.ஹர்ட்ஸ் மற்றும் 22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ் அலைவரிசைகளிலும்) காலை 8.30 முதல் 9.30 வரை வரையும் ( 21.85 மீட்டர்—13730 கி.ஹர்ட்ஸ் மற்றும் 22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ் அலைவரிசைகளிலும்) மறு ஒலிபரப்பும் செய்யப்படுகிறது.

சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானொலிப் பெட்டியில் சிற்றலை (SW) அலைவரிசைகளில் மட்டுமே கேட்க முடியும். மேலும் இணையதளம் (www.tamil.cri.cn), ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் அப்ளிகேசன்கள் வாயிலாகவும் நிகழ்ச்சிகளை கேட்க முடியும்.