தியாக அரசியலிலிருந்து பயனீட்டுவாத அரசியல் நோக்கி…
பொதுவாக இன்று பாராளுமன்ற ஜனநாயகத்தில் கட்சி எனும் நிறுவனத்தின் பண்பு என்ன? தொழில்முறையிலான பயனீட்டுவாத அமைப்பாகக் கட்சிகள் ஆகியிருக்கின்றன. ஆளும் கட்சியின் பதவிகளில் இருந்தால் மறைமுகமாகச் சொத்துக் குவிக்கலாம். டென்டர் எடுக்கலாம். பினாமி பெயர்களில் எவற்றையும் இயக்கலாம். எம்.எல்.ஏ, எம்.பி.பதவிகள் என்பது நிரந்தர வருமானம், அந்தப் பதவி தரும் பொருளியல் சலுகைகள், பென்சன் எனப் பல உத்திரவாதங்கள் உள்ளன.
இன்று தமிழகத்தில் இந்தப் பொருளியல் வளமைமையை, அதிகாரத்தை 50 ஆண்டுகளாக அனுபவித்து வருபவர்கள் திமுக-அதிமுகவினர்தான்.
புதிதாகக் கட்சி துவங்கியிருக்கும் அண்ணாமலையின் கோசம் எல்லோரும் எம்.எல்.ஏ, எம்.பி ஆகலாம், பதவி அடையலாம் என்பது.
இதற்குள்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விசிகவும் வருகின்றன. விசிக எம்பி ரவிக்குமார் திமுக சின்னத்தில் வெற்றிபெற்று வந்தவர். வைகோ கட்சியினர் திமுக சின்னத்தில் வெற்றிபெற்று வந்தவர்கள். இன்று இதே பதவிகளுக்கு வேறுவேறு கட்சிகளின் சின்னங்களையும் இவர்கள் நாடுவர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் தொடர்ந்து தொழில்முறை பாராளுமன்ற -சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் பல விதங்களில் கட்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் கட்சி முழு நேர ஊழியர்களுக்கும் பாராளுமன்ற அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் பதட்டம் நிலவவே செய்கிறது.
அடுத்து, இன்று தூரநோக்கில் என்னவகை அரசியலை மேற்கொள்வது எனும் பிரச்சினை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது. சோசலிசம்தான் இலக்கு என்றால் அதனை மறுவரைவு செய்ய வேண்டும். இந்திய அரசியல் கூடுதலாக இன்று கருத்தியலைத் தாண்டிய நடைமுறை – பிராக்மெட்டிஸ்ட்- அரசியலாக இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளும் தியாக-ஈக அரசியலிலிருந்து தொழில்முறை அரசியல் – பயனீட்டுவாத அரசியல் – நோக்கித் தள்ளப்படுகிறது. நீண்டகாலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்-இளைஞர்கள் அமைப்பில் தீவிரமாக இயங்கிய, பின்னாளில் மாநிலத்திலும் முக்கியப் பொறுப்புகள் வகித்த தோழர்.மகேந்திரனின் தவெக நோக்கிய நகர்வை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
-யமுனா ராஜேந்திரன்
