அதிரடி தீர்ப்பு: பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதி மன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் அந்த தீர்மானம் மீது தமிழக ஆளுநர் நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே. அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் மேற்கொண்டு எந்தவொரு சட்டப்பூர்வ வாதங்களையும் முன்வைப்பதற்கு இல்லை என்றால் பேரறிவாளனை விடுவிக்கும் விஷயத்தில் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த நீதிபதிகள் இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

அதன்படி ஒன்றிய அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் இந்த வழக்கை விசாரித்தது ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் ஒன்றிய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது. ஆளுநர் இது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளதால் தற்போது குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.

பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய முடிவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது. எனவே உச்சநீதி மன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் ஆளுநர் தாமதம் செய்தது தவறாகும். எனவே 142-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார்.

161-வது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே எங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர்.

ராஜீவ் கொலை கைதிகள் வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதி மன்றம் இன்று வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டையோ, தமிழக ஆளுநரின் அதிகார வரம்பையோ கருத்தில் கொள்ளாமல் தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்து இருக்கிறார்கள். இது ஒன்றிய அரசுக்கு மிகுந்த பின்னடைவாகும்.

மேலும், பேரறிவாளனை தொடர்ந்து தற்போது சிறைதண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி உள்ளிட்ட 6 பேரும் பேரறிவாளன் வழியில் உச்சநீதி மன்றத்தை அணுக வழிவகை ஏற்பட்டு உள்ளது.