கவிஞர் தாமரைக்கு தோழர் தியாகுவின் முதல் மனைவியின் மகள் சரமாரி கேள்வி – (பகுதி 3)

(பகுதி 2-ன் தொடர்ச்சி)

இதற்குப்பிறகு 2013-ல் காமன்வெல்த் உண்ணாநிலை போராட்டம் நடக்கிறது. அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவதூறுகளையும் பரப்பினீர்கள்.

2012-ல் இருந்து கருத்து வேறுபாடு முற்றி அவர் மீது நீங்கள் ஒரு பழி சுமத்தி அதன் தொடர்ச்சியாக அவரது அரசியல் செயல்பாடுகளை மேற்சொன்ன வகைகளிலெல்லாம் முடக்கி காமன்வெல்த் போராட்ட்த்தில் அவரது நேர்மையையும் இழிவு செய்து அதன் பின்னும் அவர் உங்களோடுதான் வாழ வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பீர்கள்.

இத்தனை முரண்பாடுகள் இருக்கிறபோது அது முற்றுகிறபோது அவர் அந்த வாழ்க்கையை விட்டு வெளியேறுகிறார். இதில் என்ன தவறிருக்க முடியும்..?

அதையும் மீறி அவர் உங்களுடனே இருந்திருந்தால் அது அவருக்கு என்ன வாழ்வாக இருந்திருக்கும்..?

அலைபேசியை உங்களிடம் கொடுத்துவிட்டு, யாரோடும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல், பொதுக் கூட்டங்களில் உரையாற்றாமல், போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதென்றால் மாணவப் பருவத்திலிருந்தே அரசியலே வாழ்வென வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவை பொறுத்தவரை அது தற்கொலைக்குச் சமமில்லையா..?

இந்த நிலையில் இதோடு கூடுதலாக நீங்கள் அவரை ஏமாற்றி ஒரு துரோகம் இழைத்தீர்கள். அது குறித்து தேவைப்படும் போது பேசலாம். அதற்கு அப்பா உரிய விளக்கம் கேட்டும் நீங்கள் எந்த நேர்மையும் இல்லாமல் தொடர்ச்சியாகத் தவிர்த்தீர்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் 2014-ல் அவர் வெளியேறினார்.. என் வீடு வந்து சேர்ந்தார்.

இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு பற்றி பேசுகிறீர்கள். அன்று இயக்கத்தின் மூத்த தோழர்களை உங்கள் இல்லத்திற்கு வரவழைத்து அப்பாவையும் அருகில் வைத்து அவர் மீதான குற்றங்களை நிறுவுகிறேன் பாருங்கள் என்று ஒரு ஏற்பாட்டைச் செய்தீர்கள்.

அப்பாவை ஏதோ வாங்கி வர வெளியே அனுப்பிவிட்டு அந்த இடைவெளியில் மூத்த தோழர்களை வீட்டிற்கு வரவழைத்து பேசியதன் காரணத்தை விளக்குவீர்களா..? அப்பாவின் முன்னிலையிலேயே அப்பாவின் குற்றங்களை நிரூபிப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம் வந்தது..?

நீங்கள் குற்றம் சுமத்துபவர். அப்பா குற்றத்திற்கு ஆளானவர். இது குறித்து முடிவு செய்ய அல்லது தெரிந்து கொள்ள ஒரு குழு வருகிறது. அந்தக் குழுவின் முன்னால் இரு தரப்பும் அமர்ந்திருந்து அவரவர் வாதங்களை முன் வைத்தால்தானே உண்மையைக் கண்டெடுக்க முடியும்.

ஒரு தரப்பையே அந்த இடத்தில் இல்லாமல் செய்து விட்டு நீங்கள் என்ன பேசியிருந்தாலும் என்ன முன் வைத்தாலும் அது பொய்மைக்கும் நடிப்புக்கும் கிடைத்த தற்காலிக வெற்றியாக மட்டுமே இருக்க முடியும்.

குற்றம் சாட்டப்படுபவரின் மறுப்பை அல்லது கருத்தை அன்றும் நீங்கள் பேச இடம் தரவில்லை, இன்றும் விசாரணை குழுவை முடுக்கிவிட எந்த முனைப்பையும் காட்டாமல், அதாவது அவர் கருத்துக்கும் மறுப்புக்கும் இடம் கொடுக்காமல் இன்றுவரை சொன்ன பொய்யையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

அந்த மூத்தத் தோழர்களை பொறுத்தவரை இன்றும் நான் மதிக்கிற உறவுகள்தான். ஆனால், அப்பா தரப்பை ஒருமுறையேனும் கேட்காது எடுத்த முடிவு குறித்து இன்றுவரை எனக்கு வருத்தம் உண்டு.

காமன்வெல்த் உண்ணாநிலைப் போராட்டம் பற்றி குறிப்பிடுகிறீர்கள். காமன்வெல்த் போராட்டத்தின் பின்புலம் என்ன..? எந்தப் பின்புலத்தில் அந்தப் போராட்டம் கருக்கொண்டது?

இனப் படுகொலை நீதிக்காக சிங்கள அரசைச் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த ”இலங்கையை புறக்கணிப்போம்” என்ற இயக்கம் பற்றி பரவியிருந்தது.

ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்கள் அழிக்கப்பட்டதற்கு நீதி வேண்டும். அதற்கு இந்திய அரசு இலங்கை அரசுடனான அரசுறவு, பொருளியல், பண்பாடு, கலை, விளையாட்டு என அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும். துண்டிக்கச் செய்யும் கடமை தமிழக மக்களைச் சார்ந்திருந்தது. அப்படிச் செய்வதுதான் இலங்கையைச் சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதற்கான தொடக்கமாக அமையும்.

எட்டுக் கோடி தமிழக மக்களைக் கொண்ட இந்திய அரசை நெருக்கி மக்கள் போராட்டங்களின் மூலம் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவை அயன்மைப்படுத்துவதுதான் அதன் முதற்புள்ளி.

இதை செய்வதற்குரிய முதன்மை முழக்கமான இலங்கையை புறக்கணிப்போம் – இயக்கம் தொய்வைச் சந்தித்திருந்த காலம். காமன்வெல்த் மாநாடு இனப் படுகொலை இலங்கையில் நடைபெறுகிற செய்தி வருகிறது.

இலங்கை அரசு செய்த இனக் கொலைக் குற்றச்சாட்டை மூடி மறைப்பதற்காகவும் அதன் மீது படிந்த குருதிக் கரையின் மீது வெள்ளை அடிப்பதற்காகவும் அந்த காமன்வெல்த் மாநாட்டைத் தன்னுடைய நாட்டில் நடத்த இருந்தது இலங்கை அரசு.

இலங்கையை புறக்கணிப்போம் இயக்கத்திற்கு உயிர் தந்தாக வேண்டிய கட்டாயம் இதன் மூலம் வந்தது. இந்தப் பின்னணியில் இலங்கையில் நடக்க இருக்கிற காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியத் தலைமை அமைச்சரை போகவிடக் கூடாது. அப்படிப் போக விட்டுவிட்டால் இலங்கையை புறக்கணிப்போம் இயக்கம் உயிரிழந்து போகக் கூடும். அது இனக் கொலைக்கான நீதிப் போராட்டத்தில் பெரும் பின்னடைவாகும்.

இந்த நோக்கத்திற்காகவே காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியத் தலைமை அமைச்சர் போகக் கூடாது என்ற கோரிக்கையை முதன்மையாக வைத்து காமன்வெல்த் உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அப்பாவின் உண்ணாநிலை போராட்டம் அன்றைய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை காமன்வெல்த் மாநாட்டிற்குப் போகவிடாமல் தடுத்தது.

கலைஞரின் வாயிலாக திரு. மன்மோகன் சிங் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே முடிவெடுப்பேன் என உறுதி கொடுத்தார். அதன்படி அவர் போகவும் இல்லை. இது அப்பாவின் வெற்றியல்ல தமிழ் மக்களின் வெற்றி. தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி.

இந்த உண்ணா நிலை போராட்டத்தை நாடகம் என்று சொல்வதும் உள்நோக்கம் கற்பிப்பதும், தமிழ் மக்களை அவமதிப்பதாகும். உலகத் தமிழர்களையே கேலி பேசுவதாகும்.

”வெற்றி அல்லது வீரச் சாவு” என்று தலைப்பிட்டு அப்பா போராட்டத்தில் அமர்ந்தார். தோழர் மதியவன் தலைமையில் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அது களத்திலிருந்து செயல்பட்டது.

அப்பா உண்ணாநோன்பு இருந்து கொண்டிருந்த நாட்களில் நீங்கள் ஒரு நாள்கூட எட்டிப் பார்த்ததில்லை. ஆனால் அப்பாவை அலைபேசியில் அழைத்து “வீட்டு வாடகையை கொண்டு போய் யார் கொடுப்பது என்று கேட்டீர்கள்..?” நான் பக்கத்தில்தான் இருந்தேன். அப்பா ஒரு தோழரை அழைத்து அவரை அனுப்பி அந்த நிலையிலும் வாடகை கொடுத்து வரச் செய்தார்.

அப்பா நாட்கள் செல்லச் செல்ல எலும்பும், தோலுமாய் உருகிப் போனார். கடைசி சில நாட்கள்தான் சுபவீ மாமா அங்கு வந்தார். அப்பாவின் உடல்நிலை கண்டு சுபவீ மாமா கண் கலங்கி நின்ற காட்சி என் கண்முன்னே நிற்கிறது.

இருவருக்கும் என்ன விவாதம் நடைபெற்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்கள்தான்.

ஆனால், நீங்கள் போராட்டத்தை மதிக்கவும் இல்லை போராட்ட இடத்திற்கு ஒரு நாள்கூட வரவுமில்லை. இரவு, பகலாக அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டவர்கள் தோழர்கள்தான், அவருக்கு எதாவது ஆகிவிடுமோ என்று தவித்தவர்களும் தோழர்கள்தான்.

உண்ணாநிலை போராட்டம் வெற்றிகரமாக ராஜீவ் காந்தி பொது மருத்துவனையில் முடிகின்ற நாளில் அதற்கான செய்தியாளர் சந்திப்பில் திடீரென வந்து நின்றீர்கள். “நானும் பேட்டி கொடுக்க வேண்டும்” என்று முண்டி அடித்து வம்பு செய்தீர்கள். அப்போது அண்ணன் திருமாவளவன் இருந்தார். பெ.மணியரசன் மாமாதான் “தியாகுவை தவிர யாருக்கும் இங்கு பேச அனுமதியில்லை” என குரலுயர்த்திச் சொன்னார்.

போராட்டத்தின் மீது துளி மரியாதையும் இல்லாத நீங்கள் போராட்ட்த்தில் அவருடைய நேர்மையை கொச்சைப்படுத்தி வந்த நீங்கள் போராட்ட வெற்றியில் வந்து பங்கு கொள்ள முனைகிறீர்கள் என்றால் உங்களிடம் அறம் இல்லை; நேர்மை இல்லை; உண்மையும் இல்லை என்பதையே அது காட்டுகிறது.

மீண்டும் சொல்கிறேன் அப்பா ஒரு கருவிதான்… அது தமிழ் மக்களின் போராட்டம், மாணவர்களின் போராட்டம். இலங்கையை புறக்கணிப்போம் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த போராட்டம். இந்த போராட்ட்த்தை இப்போதும் நீங்கள் கொச்சைப்படுத்துவது உங்கள் வன்மத்தையே காட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் பொய்யும் புரட்டும் ஒரு செய்தியில் பல்லிளிக்கின்றன. எந்த உண்மையும் நேர்மையும் அற்ற வன்மங்களின் மொத்த உருவமாக வெளிப்பட்டுவிட்டீர்கள். அது மோகன்ராசு மாமாவின் படுகொலை.

அன்று உங்களின் தனிப்பட்ட முயற்சியினாலும், முழுமுனைப்பினாலும் இயக்கத்தை பிளவுபடுத்தினீர்கள்.

மோகன்ராசு மாமா உள்ளிட்ட தோழர்கள் அப்பாவை இயக்கத்தை விட்டு நீக்கியதாக அறிக்கை தந்தார்கள், அதன் பின் பொதுச் செயலாளராகவே அப்பா தொடர்வதைக் கண்டித்தும் அறிக்கையும் வெளியிட்டார்கள்.

இந்தச் செயல்பாடுகளுக்கு எதிராக அன்று அப்பா தலைமையில் அப்பாவின் தலைமையை எற்றுக் கொண்ட தோழர்கள் ஒன்று கூடி அதற்கு எதிர்வினையாற்றினார்கள். இயக்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டார்கள்.

குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் அப்பாவைப் பொதுச் செயலாளர் என்று பெயரிட்டு அழைத்தவர்கள், அந்தத் தோழர்களையும் அழைத்திருக்கிறோம், அந்தத் தோழர்களும் தங்களைத் ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ என்றும், மோகன்ராசு தோழரை ‘பொதுச் செயலாளர்’ என்று அடையாளப்படுத்தச் சொல்கிறார்கள். என்ன செய்வது என்று அப்பாவைக் கேட்டார்கள். அப்பா சொன்னார் “அதே அடையாளங்களோடு மோகன்ராசு தோழர் வருவது குறித்து எனக்கு எந்தத் தடையும் இல்லை. அப்படியே வரட்டும். அவரையும் பொதுச் செயலாளர் என்றே அடையாளப்படுத்துங்கள்” என்று சொன்னார். இப்படித்தான் அவற்றுக்கு எதிர் வினையாற்றி இருக்கிறார். இன்னும் இது பற்றி சொன்னால் அது விரிந்து போகும்.

மோகன்ராசு மாமா இருக்கிறபோதே அவர்கள் இயக்கத்திற்கு ‘தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்’ எனப் பெயரிடும் பணி தொடங்கிவிட்டது என்பது கூடுதல் செய்தி. நீங்கள் “இந்த அறிக்கை வந்த 4 மாதங்களில் மோகன்ராசு மாமா கொல்லப்பட்டார்” என்று பதிவிட்டுள்ளீர்கள்.

உங்கள் பதிவுக்கு கீழே உள்ள இடுகையில் “4 மாதங்களில் தோழர் மோகன்ராசு கொல்லப்பட்டார் என்பது கூடுதல் செய்தி..!. இதையெல்லாம் மன்னிக்கவே இயலாது” என்று காயத்ரி என்பவர் குறிப்பிடுகிறார்.

அதற்கு நீங்கள் தருகிற பதிலில் “காயத்ரி, பட்டப்பகலில் அவரது நூலக அறையில் வைத்துக் கொல்லப்பட்டார்” என்று சொல்லிவிட்டு, “இந்தக் கொலைக்கு காரணம் வேறு என்று நிறுவப்பட்டது. ஆனால் எங்கள் அனைவருக்கும் உள்ளூர தெரியும் என்ன நடந்திருக்கும்..” என்று. “தனியார் விசாரணைக்கு ஏற்பாடு செய்யலாம் என்றால், உள்ளூர் தோழர்கள் மறுத்துவிட்டார்கள் என்பது வியப்பிலும் வியப்பு. இப்போதும் உள்ளூர் தோழர்களை கேட்டால் சொல்வார்கள்…” என்று பதிலளித்துள்ளீர்கள்.

கொலை ஏன் நடந்தது என்று நிறுவப்பட்ட உண்மையை விரித்து நான் இங்கு சொல்லப் போவதில்லை. கொல்லப்பட்டது என் மாமா. ஆனால் உங்களைத் தவிர மோகன்ராசு மாமாவின் குடும்பத்தில் ஒருவரோ, மாமாவோடு ஒன்று கலந்து நின்றவர்களில் ஒருவரோ, இப்படி ஒரு நாளும் சொன்னதில்லை.

இன்றைக்கும் மோகன்ராசு மாமாவோடு எல்லாமுமாக இருந்த தோழர்கள் அப்பாவோடு இன்றும் அதே மதிப்போடும், அன்போடும் தொடர்பில் இருக்கிறார்கள்.

மோகன்ராசு மாமாவின் இறுதி நிகழ்விற்கு தொடர் வண்டியில் முன்பதிவு செய்ய முடியாமல் கழிவறை அருகில் அமர்ந்தேதான் அப்பா ஈரோடு சென்றார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் அவருடன்தான் பயணப்பட்டேன். எம்.ஆர்.எஃப் சேகர் தோழரும், பாரதியும் உடன் வந்தனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் அப்பாவைப் பார்த்த மாத்திரத்தில் மோகன்ராசு மாமாவுடன் எப்போதும் உடன் இருக்கும் தோழர்கள் “அய்யா…” என கதறி ஓடி வந்து அணைத்து அழுத காட்சியை நான் பார்த்துக் கொண்டுதான் நின்று கொண்டிருந்தேன்.

அங்கே உடற்கூறாய்வு பணிகளுக்காக மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்கள் கலங்கிய இதயத்தோடும் கொன்றவர்கள் தப்பித்து விடக் கூடாது என்ற உறுதியோடும் நின்று கொண்டிருந்தார். தோழர் ப.பா.மோகன் தன் ஆற்றல் முழுவதையும் திரட்டி வழக்கை திறம்பட நடத்தி, கொன்றவர்கள் மீதான கொலைக் குற்றத்தை நிறுவிக் காட்டினார்.

குற்றவாளிகள் இவர்கள் என நிறுவுவதென்றால் குற்றத்திற்கான காரணமும் நீதிமன்றத்தில் நிறுவப்பட்டதென்று பொருள். நீதிமன்றத் தீர்ப்பையும் அனுப்பச் சொல்லிக் கேட்டுள்ளேன்.

இந்த வழக்கை நடத்திய காவல்துறையையும் அந்த வழக்கை உணர்வுப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் நடத்தி வென்ற ப.பா.மோகன் அவர்களையும் நீங்கள் அவமதிக்கிறீர்கள்.

என் அப்பா மீது நீங்கள் புனைகிற குற்றசாட்டுகளை இனியும் அனுமதிக்க முடியாது. அதை நீதிமன்றம் கொண்டு செல்ல யாரும் உங்களைத் தடுக்கவும் இல்லை. நீதிமன்றம் செல்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் விசாரணைக் குழு செயல்படுவதற்கான வழிமுறைகளைக் காணுங்கள்.

இதில் எதுவானாலும் அதனை எதிர்கொள்ள அப்பா தயாராகவே இருக்கிறார்.. இருப்பார்.

இந்த முறையைத் தவிர்த்து நீங்கள் இனியும் இப்படிப்பட்ட பதிவுகளை இட்டால், என் அப்பாவின் உள்ளத் தூய்மையை நன்கு அறிந்தவள் உணர்ந்தவள் என்ற முறையில் உங்களை நான் சளைக்காமல் எதிர்கொள்வேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக காமன்வெல்த்துக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதையும் அதன் மூலம் உலகத் தமிழர்களைச் சிறுமைப்படுத்துவதையும்…

மோகன்ராசு மாமாவின் கொலைக்கு வன்மத்தோடு கற்பனையாக கற்பிக்கும் உங்கள் உள் நோக்கத்தையும் அதன் மூலம் நீங்கள் செய்யும் அவதூறையும், ஏற்றுக் கொள்ளவே முடியாது.

அதற்கு நீங்கள் பொது வெளியிலும், மக்கள் மன்றத்திலும் பதில் சொல்லும் கட்டாயத்தை நான் ஏற்படுத்தத் துணிவேன்.

மீண்டும் சந்திப்போம்.

சுதா காந்தி. தி

 (முற்றும்)