நூறு சாமி – விமர்சனம்
நடிப்பு: விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், தாமரைச் செல்வி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சசி
ஒளிப்பதிவு: எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ்
படத்தொகுப்பு: ஹரிஷ் யுவராஜ்
இசை: பாலாஜி ஸ்ரீராம்
கலை: வி.சசிகுமார்
ஸ்டண்ட்: ராம்குமார்
தயாரிப்பு: ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ மீரா விஜய் ஆண்டனி
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ளது வலையம்பட்டு கிராமம். இங்கு வசித்து வரும் செல்வி (ஸ்வாசிகா) இளம் விதவை. 26 வயதிலேயே கணவரை இழந்த இவருக்கு பள்ளிப் படிப்பு படிக்கும் வயதில் பாஸ்கர், விவேக் என்று இரண்டு மகன்கள். அவர்கள் தான் தன் உலகம் என்றிருக்கும் செல்வி, அவர்களை படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக விவசாயக் கூலி வேலை முதல் டிராவல் ஏஜென்ஸி அலுவலக வேலை வரை பலதரப்பட்ட பணிகள் செய்து, கஷ்டப்பட்டு உழைத்து வளர்க்கிறார். பாஸ்கர் (அஜய் தீஷானாகவும்), விவேக் (சக்தியாகவும்) வளர்ந்து விடலைப் பருவத்தை எட்டுகிறார்கள்.
தனி மனுஷியாக வறுமையிலும் ஒழுக்கமாக வாழ்ந்துவரும் செல்விக்கு, அவர் விதவை என்பதால் சில சில்லரைத்தனமான ஆண்கள் ஆபாச அழைப்புகள் மூலம் அவருக்கு தொல்லை கொடுக்கிறார்கள். செல்வி படும் இன்னல்களைப் பார்த்து இரக்கப்படும் ஒரு பள்ளி ஆசிரியர் (அருள்தாஸ்), “நீ ஏன் மறுமணம் செய்துகொள்ளக் கூடாது?” என்று கேட்க, அது சரி தான் என்று நினைக்கும் செல்வி “என் பிள்ளைகள் சம்மதித்தால் செய்து கொள்ளலாம்” என்கிறார். ஆனால், இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் மூத்த மகன் பாஸ்கர், அம்மாவின் எண்ணம் தெரிந்து கோபத்தில் கொந்தளிக்கிறார். இதனால் தன் மறுமண ஆசையை குழி தோண்டிப் புதைத்து விடுகிறார் செல்வி.

இதன்பின், வந்தனா (காவ்யா அனில்) என்பவரை பாஸ்கரும், சந்தியா (பாடினி குமார்) என்பவரை சக்தியும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இச்சமயத்தில், செல்விக்கு இன்னொரு திருமண வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்ற விஷயத்தை ஏஞ்சலா சிஸ்டர் (லிஜோமோல் ஜோஸ்) என்ற கன்னியாஸ்திரி பாஸ்கருக்கு எடுத்துச் சொல்லி அறிவுரை வழங்குகிறார். விளைவாக, மனம் மாறும் பாஸ்கர் முதலில் அம்மாவுக்குத் மறுமணம், அதன்பிறகு தான் தனக்கு திருமணம் என்று உறுதி ஏற்கிறார். அண்ணனின் முடிவை தம்பி விவேக்கும் ஏற்றுக்கொள்கிறார்.
மகன்களின் யோசனையை முதலில் ஏற்க மறுக்கும் செல்வி, பின்னர் அவர்களின் வற்புறுத்தலை ஏற்று, அவர்கள் தனக்கு பார்த்து வைத்திருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஏழுமலையை (விஜய் ஆண்டனி) சந்திக்கிறார். வெளிநாட்டில் பல ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, சொந்த ஊர் திரும்பி, விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் ஏழுமலையின் நல்ல உள்ளமும், நல்ல பண்புகளும் பிடித்துப்போக, அவரை மறுமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார் செல்வி. அவரின் திருமணத்தை அவரது மகன்களே முன்னின்று நடத்த தயாராகிறார்கள்.
ஆனால் ஊராரும், உறவுக்காரர்களும் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள். குடும்ப மானம் போய்விடும் என்று கருதும் செல்வியின் அண்ணன் கணேசன் (கருணாஸ்), தன் தங்கையை ஆணவக்கொலை செய்ய முயலுகிறார். ஊர் மானம் போய்விடும் என்று கருதும் பச்சை பெருமாள் (பாலாஜி சக்திவேல்) உள்ளிட்ட ஊர்க்காரர்கள் கம்பு, கத்தி, வீச்சரிவாள் சகிதம் செல்வியின் மறுமணத்தை நிறுத்த ஒன்று சேருகிறார்கள்.
பிறகு என்ன நடந்தது? திட்டமிட்டபடி செல்வி – ஏழுமலை திருமணம் நடந்ததா, இல்லையா? செல்வியின் வாழ்க்கை என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு புரட்சிகரமாக விடை அளிக்கிறது ‘நூறு சாமி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கிராமத்து இளம் விதவையாக, இரண்டு மகன்களுக்கு அம்மாவாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருக்கிறார்.
‘லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு இது அவருக்கு மிகவும் கனமான, கடினமான கதாபாத்திரம். தன் பாத்திரம் உணர்ந்து, அதுவாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார் ஸ்வாசிகா. அந்த கதாபாத்திரத்துக்கு தன்னத் தவிர வேறு எந்த நடிகையும் பொருத்தமில்லை என்று சொல்லாமல் சொல்லும் வகையில் அத்தனை சிறப்பாக, அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளத் தக்க இந்த பாத்திரத்துக்காகவும், வியக்க வைக்கும் நடிப்புக்காகவும் அவருக்கு நிச்சயம் நிறைய விருதுகள் கிடைக்கும்.
செல்வியின் மூத்த மகன் பாஸ்கராக அஜய் திஷானும், இளைய மகன் விவேக்காக சக்தியும் நடித்திருக்கிறார்கள். இருவருமே அவரவர் கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்கள். மூத்த மகனுக்கு உரிய பொறுப்பு, இளைய மகனுக்கு உரிய துடிப்பு என இருவரது கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கதாநாயகன் என்ற லேபிள் இல்லாமல், கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக, விவசாயி ஏழுமலையாக, படத்தின் இரண்டாம் பாதியில் வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படியொரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க முன் வந்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். கொஞ்சம் அப்பாவித்தனமும், நிறைய நல்ல குணங்களும் கொண்ட கிராமத்து மனிதனாக இயல்பாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
பாஸ்கரின் காதலி வந்தனாவாக வரும் காவ்யா அனில், விவேக்கின் காதலி சந்தியாவாக வரும் பாடினி குமார், செல்வியின் அண்ணன் கணேசனாக வரும் கருணாஸ், கன்னியாஸ்திரி ஏஞ்சலா சிஸ்டராக வரும் லிஜோமோல் ஜோஸ், ஊர்ப் பெரிய மனிதர் பச்சை பெருமாளாக வரும் பாலாஜி சக்திவேல், கிராமத்துப் பள்ளி ஆசிரியராக வரும் அருள்தாஸ், போலீஸ் அதிகாரியாக வரும் முனீஷ்காந்த், மற்றும் ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், தாமரைச் செல்வி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சசி. ’சொல்லாமலே’, ’பூ’, ’பிச்சைக்காரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள சசி, எந்த இயக்குநரும் தொடத் தயங்கும் ஒரு கதையை, கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையம்பட்டு கிராமத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். இளம் விதவை மற்றும் ஒற்றைப் பெற்றோரின் வலி நிறைந்த வாழ்க்கையை மிகைப்படுத்துதல் ஏதும் இன்றி, யதார்த்தமாகச் சொல்லியதுடன், அம்மாவை மனுஷியாக மதிக்க வேண்டும் என்ற அருமையான கருத்தை அழுத்தமாகச் சொல்லி, தானொரு வித்தியாசமான, முற்போக்கான இயக்குநர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பாராட்டுகள் இயக்குநர் சசி!
பாலாஜி ஸ்ரீராமின் இசை, தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவு, ஹரிஷ் யுவராஜின் படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் இயக்குநரின் கதை சொல்லலுக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
‘நூறு சாமி’ – பார்க்கலாம்; ஆராதிக்கலாம்; கொண்டாடலாம்!
ரேட்டிங்: 4.25/5
