“அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களை தனிமைப்படுத்தும் பாசிச சதி!” – சுப.உதயகுமார்

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளரும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ”அணுமின் நிலையங்களை எதிர்க்கும் மாநிலங்களுக்கு அணு உலை மின்சாரம் கொடுக்க மாட்டோம் என மத்திய எரிசக்தி அமைச்சர் திரு. பியுஷ் கோயல் இன்று காலை சென்னையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இது அணு உலைகளைக் கடுமையாக எதிர்க்கும் எதிர்கட்சிகள் ஆளும் கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைத் தனிமைப்படுத்தும் ஒரு சூழ்ச்சிதானே தவிர வேறல்ல.

பியுஷ் கோயல் அவர்களோ, மோடி அரசோ இந்தக் கருத்தில் உண்மையான உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தால், கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை கோலாரில் புதைக்க அப்போதைய பா.ஜ.க. முதல்வர் ஜகதீஷ் ஷட்டர் மறுத்தது தவறு என்று ஒத்துக்கொள்ள வேண்டும். கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை ஏற்க மறுக்கும் கர்நாடகாவுக்கு கூடங்குளத்திலிருந்து மின்சாரம் தர மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். வரவிருக்கும் கர்நாடக மாநிலத் தேர்தலில் இந்த திடீர் ஞானோதய அணுசக்திக் கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். செய்வார்களா?

மக்களைக் குழப்பி, மாநிலங்களுக்கிடையே பிரிவினைகளை உண்டு பண்ணும் இன்னொரு பாசிச சதிதான் இதுவே தவிர, உண்மையான, உளபூர்வமான கொள்கையோ, திட்டமோ அல்ல. மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. அதிகமாக, அடர்த்தியாக மக்கள் வாழும் இந்தியாவுக்கு அணுசக்தி தேவையல்ல, பாதுகாப்பானதல்ல என்று முடிவெடுப்பதுதான் சரியான அணுகுமுறை” என தெரிவித்துள்ளார்.