பிக்பாஸ்: அவமானம் தாங்காமல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் பரணி!

விஜய் டிவி ஒளிபரப்பும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இன்று மிகவும் அருவருப்பான கட்டத்தை எட்டியது. ‘பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் சகாக்கள் ரொம்ப கேவலமாக அவதூறு செய்ததை அடுத்து, நடிகர் பரணி அவமானம் தாங்காமல், விதிகளை மீறி தப்பியோட முயன்றார். பின்னர் அவரது கோரிக்கையை ஏற்று, நிகழ்ச்சியை விட்டு வெளியேற அவருக்கு அனுமதி அளித்தது ‘பிக்பாஸ்’ குழு.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முதன்முதலாக ஆரம்பமானபோது, ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் 15 பேர் அனுப்பப்பட்டனர். அவர்களில் நடிகர் ஸ்ரீ உடல்நலக் குறைவு காரணமாக வெளியேற்றப்பட்டார். அடுத்து சகாக்களின் நாமினேஷன் மற்றும் பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் முதலில் நடிகை அனுயாவும், நேற்று நடிகர் கஞ்சா கருப்பும் வெளியேற்றப்பட்டனர்.

பரணி தான் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்திருந்த சகாக்கள், கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் அனைவரது கோபமும் பரணி பக்கம் திரும்பியது. அவர் தவிர்த்து மற்ற அனைவரும் கூடி பேசினார்கள்.

 “பரணி இந்த வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை” என்ற கேவலமான புதிய புகாரை கொளுத்திப் போட்டார் பாஜக.வை சேர்ந்த காயத்ரி ரகுராம். அதை வழிமொழியும் வகையில் ஜூலியானா, “பரணி பெண்கள் விஷ்யத்தில் ரொம்ப தப்பானவன். என்வே, அவனை தனியே சந்தித்து பேசாதே” என தனக்கு கஞ்சா கருப்பு அறிவுரை சொன்னதாக தெரிவித்தார்.

“பரணியின் மனநிலை சரியில்லை. யாரும் அவருடன் பேச வேண்டாம். அவர் இருந்தால் நாங்கள் வீட்டில் இருக்க மாட்டோம் என்பதை பிக்பாஸூக்கு தெரிவித்து விடுவோம்” என்றார் சினேகன்.

இவர்களின் அவதூறு அறிந்த பரணி, அவமானம் தாங்காமல் தன்னை வெளியே அனுப்பிவிடுமாறு பிக்பாஸ் குழுவிடம் கெஞ்சினார். அதற்கு பலன் இல்லாததால், வீட்டை விட்டு தப்பியோடும் எண்ணத்தில் மதில் மேல் ஏறிய பரணி, கம்பி வேலியை தாண்ட முயற்சித்தார். பரணி இப்படியெல்லாம் செய்தபோது, சகாக்கள் அதை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்து நக்கலடித்துக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் அவரை சமாதானப்படுத்த அருகில் கூட செல்லவில்லை.

இறுதியில், பிக்பாஸ் குழு பரணியை அழைத்துப் பேசி, தப்பியோட முயன்ற வகையில் விதியை மீறிவிட்டதாக குற்றம் சாட்டி, அவர் வீட்டிலிருந்து வெளியேற அனுமதி கொடுத்தது.

(கீழே உள்ள படத்தில் மனைவி, குழந்தையுடன் பரணி)

0a1