காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றத்துக்கு மோடி அரசு பெப்பே…!

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று நரேந்திர மோடியின் மத்திய பாரதிய ஜனதா அரசு தெரிவித்துள்ளது.

‘காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது’ என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த செப்.30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அக்டோபர் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று (திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவர் வாதிடும்போது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது” என்றார்.

மத்திய அரசின் இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

“காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் வரும் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களிலும் காவிரி நீர்ப்பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கெனவே மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதிகளை அறிவித்துவிட்ட நிலையில் கர்நாடகா இப்போதைக்கு பிரதிநிதியை அறிவிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், மத்திய பாஜக அரசு காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு சாதகமாக இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது கண்டனத்துக்கு உரியது என தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.