“விவசாயிகளை தீவிரவாதிகளை போல் நடத்துகிறது மத்திய அரசு!” – சீதாராம் யெச்சூரி

“துயரத்தில் துடிக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்வதை விடுத்து, அவர்களைத் தீவிரவாதிகள் போல மத்திய அரசு நடத்துகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘‘துயரத்தால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். போராட்டம் மூலம் தங்களது நிலைமையை உணர்த்த முயற்சிக்கும் விவசாயிகளை மத்திய அரசு அடக்க முயற்சிக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்காமல் தீவிரவாதிகளைப் போல நடத்துகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே குறைந்தபட்ச ஆதார விலையுடன், உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை விற்க விவசாயிகளுக்கு உரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமும் அனுப்பி வைத்துள்ளார். அதில் விரைவில் தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.