மன்னிப்பு கோரியதால் பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கு முடித்து வைப்பு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏ-வும், நடிகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் அய்.கோபால்சாமி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெயவேல் விசாரித்தார்.

இந்த வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். மனுதாரரான அய். கோபால்சாமி, எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எஸ்.வி.சேகர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.