சத்ரியன் – விமர்சனம்

நாயகன் ஒரு ரவுடி. ஒரு தாதாவிடம் அடியாளாக வேலை பார்ப்பவன். தன்னைக் கண்டு இந்த சமூகமே பயப்படுவதாக பெருமையாகக் கூறித் திரிபவன். அவனை ஒருதலையாக காதலிக்கும் நாயகி, ‘முதல்வன்’ பட பாணியில் ஒரு சவால் விடுகிறாள்: “நீ கத்தி இல்லாமல் ஒருநாள், ஒரே ஒருநாள் இந்த ஊரை சுற்றி வா… பார்க்கலாம்.” சவாலை ஏற்றுக்கொள்ளும் நாயகன் அதில் வெற்றி  பெற களம் இறங்குகிறான். இடுப்பில் கத்தி இல்லாததால் அவனுக்கு ஏற்படும் அச்சமும், அதனால் அவனுக்குள் ஏற்படும் மன மாற்றமும், அதன் தொடர் விளைவுகளும் தான் ‘சத்ரியன்’ படக்கதை.

ஒரு ரவுடி வைத்திருக்கும் ஆயுதத்தைக் கண்டு தான் இந்த சமூகம் பயப்படுகிறதே தவிர, அவனைக் கண்டு அல்ல. என்ற கருத்தை ரவுடிகளின் நெற்றிப்பொட்டில் அறைவது போல் எடுத்துச் சொல்லி, ஆயுத கலாச்சாரத்தையும், வன்முறையையும் அவர்கள் கைவிட வற்புறுத்தும் இந்த படம் வரவேற்புக்கு உரியது.

திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா, அமைச்சர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் அழகான மகள் மஞ்சிமா மோகன், அப்பாவி மகன் சவுந்தர்ராஜா ஆகியோருக்கு அன்பான தந்தையாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டி, திருச்சியின் இன்னொரு தாதாவான அருள்தாஸ் மூலம் சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு இருக்கிறார்.

சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். ஒரு நாள் கல்லூரிக்குச் சென்ற சரத் லோகிதஸ்வாவின் மகள் மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கிறார்கள். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறார்.

இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்குவரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தைப் பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவரது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.

அப்போது தான் மஞ்சுமா, “கத்தி இல்லாமல் ஒருநாள் முழுக்க தைரியமாக நீ ஊரை சுற்றி வந்துவிட்டால், உன்னை தொந்தரவு செய்யாமல் விலகிக்கொள்கிறேன்” என்று சவால் விடுகிறார். அதை ஏற்கும் விக்ரம் பிரபு, கத்தி இல்லாமல் வெளியே உலவும்போது, ஆங்காங்கே இருக்கும் ரவுடி கும்பல்களை பார்த்து அச்சமடைகிறார். இவ்விதம் சவாலில் தோற்றுப்போகும் விக்ரம் பிரபுவிடம், “ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம்” என அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை ஏற்கும் விக்ரம் பிரபு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வர, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.

இது ஒருபுறம் இருக்க, தாதா அருள்தாஸின் ஆள் ஒருவனை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள்தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.

விக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கம் மிரட்டினாலும், காதல் காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.

சரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், தாதாவாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார்.

படத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சவுந்தர்ராஜா ஒரு பயந்தாங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை. இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்‌ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாதா – ரவுடி என ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியாக வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. “பாறை மேல தூறல் போல” பாடல் ஈர்க்கிறது. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.

`சத்ரியன்’ – அமைதியை வலியுறுத்தும் சமாதான புறா!