“சத்தமின்றி முத்தம் தா’ படம் கண்டிப்பாக உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும்!” –  இயக்குநர் ராஜ்தேவ்

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம் ‘சத்தம் இன்றி முத்தம் தா’.

ஒளிப்பதிவு – யுவராஜ்.M., படத் தொகுப்பு – மதன்.G., நடன இயக்கம் – தினேஷ், சண்டை இயக்கம் – ‘மிராக்கிள்’ மைக்கேல், பாடகர்கள் – ஆண்ட்ரியா, M.M.மானசி, ஜித்தின் ராஜ், ரவி.G., பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை – A.JPஆனந்த், தயாரிப்பு – கார்த்திகேயன்.S, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜ் தேவ்.

 இத்திரைப்படம் வரும் மார்ச் 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

0a1b

இந்நிகழ்வில் நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசும்போது, “இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம். முதல் நாள் எனக்கு போன் செய்து இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார்கள். அடுத்த நாள் நான் சென்னை வந்து இந்த படத்தில் கலந்து கொண்டேன்.

இதற்கு முதலில் நான் ஶ்ரீகாந்த் சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். முதலில் இயக்குநரிடம் இருந்து போன் கால் வந்தது. உடனேயே ஸ்ரீகாந்த் சாரிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அவர்தான் இந்தப் படத்தின் கதையை என்னிடம் விவரித்துச் சொன்னார். எனக்கு கதை பிடித்திருந்தது. ஆனால், இயக்குநர் சொன்ன தலைப்பு மட்டும் எனக்குப் புரியவில்லை. ஸ்ரீகாந்த் சார்தான் அதற்கு அர்த்தம் சொன்னார்.

இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன். சொன்னதைச் செய்துள்ளேன்.

நான் இப்போது தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்தப் படம் எனக்கு இதுவரை செய்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.

இசையமைப்பாளர் ஜுபின் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஆனந்த் சார்தான் நான் இந்தப் படத்தில் பணியாற்ற மிக முக்கிய காரணம். இதுவரை நான் பணியாற்றிய படங்களுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது. அதில் ஒரு பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். பாடலாசிரியர் நல்ல வரிகளைக் கொடுத்துள்ளார். படம் ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்தாலும் முடிவு உங்களைக் கண் கலங்க வைக்கும். ஶ்ரீகாந்த் சாரினால் இன்று இங்கு வர முடியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் ராஜ்தேவ் பேசும்போது, “இந்தப் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது போலத்தான் எழுதவும் ஆரம்பித்தேன். இந்தப் படத்திற்காக நடிகர்களைத் தேர்வு செய்யும்போது இது போன்ற கதைகள் கொண்ட படங்களில் நடிக்காதவர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அப்படித்தான் ஶ்ரீகாந்த் சாரை சந்தித்து இந்த படத்தைப் பற்றிப் பேசினேன். அனைத்து நடிகர்களையும் அப்படித்தான் தேர்வு செய்தேன். கதாநாயகியும் ஹீரோவுக்கு நிகராக சிறப்பாக நடித்துக் கொடுத்தார். இசையமைப்பாளரும் நானும் நிறைய டிஸ்கஸ் செய்தோம். படத்தில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரில் சத்தம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும் இது தலைப்புக்கேற்ற படமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இத்திரைப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். படம் கண்டிப்பாக உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும்.

படத்தில் ஸ்ரீகாந்தின் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகப் பெரியது. அவர் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படமாக இருக்கும். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும். நன்றி” என்றார்.

மாறுபட்ட திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள இப்படம் தமிழகமெங்கும் வரும் மார்ச் 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.