ஜெ.வுக்கு ரஜினி சிரம் தாழ்த்தி அஞ்சலி: சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார்!

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30  மணிக்கு காலமானார்.

அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன்பிறகு அது பொது மக்கள் அஞ்சலிக்காக அண்ணா சாலையில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் ராஜாஜி அரங்குக்கு நேரில் வந்து, சிரம் தாழ்த்தி ஜெயலலிதாவுக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். பின்னர் அருகிலிருந்த சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மருமகன் தனுஷ், மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

0a1c

முன்னதாக ரஜினி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.