“நேரம் கூடி வரும்போது சந்திப்போம்”: ஈழத் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்!

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 150 வீடுகளை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டு வீடுகளை வழங்குவதாக இருந்தது. ஆனால்,  வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அப்பயணத்தை ரஜினி ரத்து செய்துவிட்டார்.

ரஜினியின் யாழ்ப்பாணம் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக தலைவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ஈழத்தமிழ் மக்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

0a1