பா.ஜ.க.வில் சேர அழைப்பு: கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு!

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்  3-வது நாளாக ரசிகர்களை சந்தித்தார். அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகு அவரை சந்தித்த செய்தியாளர்கள், ரசிகர்களுடனான சந்திப்பு குறித்து அவரது கருத்தை கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, “ரசிகர்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம். இந்த ரசிகர்கள் சந்திப்பு முடிந்தவுடன், அடுத்து 15 மாவட்டங்கள் உள்ளன. அடுத்ததாக நேரம் கிடைக்கும்போது, இதே போன்று திட்டமிட்டு அ ந்த மாவட்டங்களின் ரசிகர்களையும் சந்திக்கும் எண்ணம் உள்ளது” என்றார்.

அரசியலில் ஈடுபடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ அரசியலில் நுழைவது பற்றி எனது கருத்தை ஏற்கெனவே ரசிகர்களின் முன்னிலையில் தெரிவித்துவிட்டேன். தற்போதுள்ள நிலையில் மேலும் அது பற்றி பேச விரும்பவில்லை. அரசியல் குறித்து எதையும் கேட்காதீர்கள்” என்றார் ரஜினிகாந்த்..

“மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நீங்கள் பாஜகவில் சேர்ந்தால் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். பாஜகவில் நீங்கள் இணைவீர்களா” என்று கேட்டதற்கு, “இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார் ரஜினி.