”21 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை!” – ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் அரசியலில் குதிக்கும் ஆசையில் ’ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை நட்த்தி வந்தாலும், ”வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” என்றும், ”யாருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை” என்றும் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

மேலும், ”என்னுடைய படங்களையும் மன்றக் கொடியையும் எவரும் பயன்படுத்தக் கூடாது” என்றும், ”வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தண்ணீர் பிரச்சினையை எந்தக் கட்சி தீர்ப்பதாகச் சொல்கிறதோ அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்றும் தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் ரஜினியை சந்தித்த நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். “தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் கட்சி என்று மாநிலக் கட்சியைச் சொல்கிறீர்களா, தேசியக் கட்சியைச் சொல்லுகிறீர்களா?” என்று கேட்டதற்கு, ‘இரண்டும் தான். மத்திய, மாநிலக் கட்சிகளைத் தான் சொல்றேன்’ என்று பதிலளித்தார்.

”சட்டமன்ற தேர்தல் தான் உஙகள் இலக்கு என்றீர்கள். இப்போது 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில், 21 தொகுதிகளிலும் நீங்கள் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா?’ என்று கேட்டதற்கு “இல்லை” என்று பதிலளித்துச் சென்றார் ரஜினி.