காவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:-

நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்த சூழலில் மத்திய அரசு சில காலத்திற்கு அமைதி காத்து வந்தது. தற்போது #OALP (Open Acrege Licensing Policy) மூலம் மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை துவக்கியுள்ளது.

அதனடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 341ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் இருந்து பெற்றிருந்தது. நாகை, காரைக்கால், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் இந்த கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர்,, வேதாரண்யம், கோட்டுச்சேரி, திருமலைராயன், திண்டிவனம், வானூர்,காரைக்கால், புவனகிரி, பெரியகுடி ஆகிய இடங்களில் இந்த கிணறுகள் அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மாதம் 23ஆம் தேதி தமிழக எதிர்கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாயிகள் ஆகியோர் மரக்காணம் முதல் ராமேஷ்வரம் வரையிலான் மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டத்தை அறவழியில் நடத்தினர். மொத்தமாக 3லட்சம் பேர் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி மேலும் 104 ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்துள்ளது. நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் அரியலூர் கடலூர் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்தக் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15கிணறுகள், திருவாரூரில் 59 கிணறுகள், தஞ்சாவூரில் 17 கிணறுகள், அரியலூரில் 3 கிணறுகள், கடலூரில் 7 கிணறுகள், ராமநாதபுரத்தில் 3 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. மொத்தமாக 176 ஹெக்டேர் விவசாய மற்றும் வறண்ட நிலப்பரப்பு குத்தகைக்கு எடுக்கப்படவுள்ளதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல அரசியல், விவசாய, சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில் தமிழக அரசு இத்திட்டங்கள் எளிதில் வருவதற்கு ஏதுவாக கடந்த ஆண்டே மத்திய அரசு விதியில்.மாற்றம் கொண்டு வரும் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் இந்தியச் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து 9.10.2018 அன்று ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில் உள்ள 13 கோரிக்கைகளில் 10-வது கோரிக்கை அதிர்ச்சியைத் தரும் வகையில் இருந்தது.தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த மக்களின் கருத்துக் கேட்பு இல்லாமலே சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பருவமழை தொடர்ச்சியாக பொய்த்துவரும் நிலையில் விவசாயிகள் பெரும் வாழ்வாதார சிக்கலில் தவித்து வருகின்றனர் இந்த நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த மத்திய அரசின் உதவியுடன் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் முயன்று வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த முயற்சி கடும் கண்டனத்துக்குரியது.

காவிரி டெல்டா பகுதியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் அப்பகுதியில் நில அமைப்பே கடல் மேற்பரப்பு மட்டத்திற்கு கீழே இறங்கி வருவதாகவும் இதன் காரணமாக நிலப்பகுதியில் கடல் நீர் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்புகுந்து விட்டதாகவும் பல்வேறு ஆய்வுகள் வெளிவரும் நிலையில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை அப்பகுதியில் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து இம்முயற்சியை தடுக்காவிட்டால் காவேரி டெல்டா அழிவதை நம் தலைமுறை அல்ல நாமே நம் கண்முன்னே காணும் நிலை உருவாகும்.

காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுத்து வரும் சூழலில் இதைப்போன்ற தொடர் அறிவிப்புகள் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன. நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றத்தால், உலகம் முழுவதும் “ஹைட்ரோகார்பன் காலம்” (ERA) முடிவிற்குவந்துவிட்டதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள், இந்த பின்னணியில் மேலு நூற்றுக்கணக்கான கிணறுகளை அமைக்க நினைப்பது அறிவார்ந்த செயலாகாது. இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் டீசல் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடப்போவதாக அறிவித்துள்ளன.

தமிழகத்தில் நடந்த உணவு உற்பத்தியில் சுமார் 65%காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றது, அதுவே இப்போது 33% ஆக குறைந்துள்ளது. நம் உணவிற்கும் அண்டை மாநிலங்களை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது, இது இன்னும் சில ஆண்டுகள் தொடருமானால் ஒட்டுமொத்த உணவிற்கும் நாம் அடுத்த மாநிலத்தை எதிர்பார்த்து இருக்கவேண்டுமென்ற நிலை வரும், நம்முடைய உணவு இறையாண்மை கேள்விக்கு உள்ளாகும்.

இந்த திட்டங்களை தடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்க்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவிக்க தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் காட்சிகள், சமூக இயக்கங்கள், சூழல் அமைப்புகள், வணிக சங்கங்கள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டிய அவசியம் உள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான எதிர்ப்பு மட்டுமல்ல, நம்முடைய உணவு உத்தரவாதத்திற்கான நகர்வும் கூட

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.