“கதையை கேட்டு முடித்ததும் குமுறிக் குமுறி அழுதேன்!” – விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனி இசையமைத்து, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சட்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சசி இயக்கியிருக்கும் படம் இது.

கே.ஆர். பிலிம்ஸ் சரவணன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் மொத்த ஏரியாவையும் வாங்கி, எல்லா ஏரியாக்களையும் விற்று முடித்துவிட்டனர். கூடவே ஸ்கைலார்க் பிலிம்ஸ் ஸ்ரீதர் வியாபாரத்தில் கை கோர்த்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 4ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனையொட்டி, இப்படத்துக்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டமும், “நெஞ்சோரத்தில்…” என்ற பாடலும் திரையிடப்பட்டன.

நிகழ்ச்சியில் கே.ஆர். பிலிம்ஸ் சரவணன் பேசும்போது, ” இது நான் வாங்கி வெளியிடும் முதல் படம். இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனி பாணியிலான கமர்ஷியல் படம். ‘நான்’, ‘சலீம்’ படங்களில் காதலையும் ஆக்ஷனையும்  விஜய் ஆண்டனி சிறப்பாக கையாண்டிருந்தார். ‘இந்தியா பாகிஸ்தான்’ காமெடி. இந்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் ஆக்ஷன், காதல், காமெடி எல்லாம் இருக்கிறது. அது இயக்குனர் சசியின் பாணியில் மெருகேறி சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இயக்குனர் சசி பேசும்போது, “இந்த படத்தைப் பொறுத்தவரை எடுக்க நினைத்ததை சரியாக எடுத்தேன். எல்லோருக்கும் பிடித்து இருந்தது. எனினும், அண்மையில் ஒரு நாள்  எனக்கு கொஞ்சம் பதட்டம். ஏனென்றால், எனது படத்தை நம்பி விலை கொடுத்து வாங்கிய கே.ஆர். பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லார்க நண்பர்கள் படம் பார்க்க இருந்த நாள் அது. படத்தைப் பார்த்தார்கள். மறுநாள் அவர்கள் ஆபீசுக்குப் போனேன். என்னை கார்த்திக் மிகவும் உற்சாகமாக வரவேற்றார். முன்னை  விடவும் உற்சாக வரவேற்பு. அப்போதுதான் எனக்கு நிம்மதி.  படத்தை  வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே, டிக்கெட் வாங்கி பார்க்கவரும் எல்லோருக்கும் படம் பிடிக்கும்.

“இது பிச்சைக்காரர்களைப் பற்றிய  படம் அல்ல. சூழ்நிலை காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை.  இதற்கு ‘பிச்சைக்காரன்’ என்பதைவிட பொருத்தமான டைட்டிலே  இல்லை.   வேறு யாராலும் முடியாத அளவுக்கு சரவணன் மிகப் பிரமாதமாக இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போகிறார்” என்றார்.

விஜய் ஆண்டனி பேசும்போது, “என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதே சசி சார்தான் – ‘டிஷ்யூம் படத்தில்! அவரோடு படம் பண்ண வேண்டும் என்ற என் ஆசையைத் தெரிவித்தேன். அப்போது அவர் சொன்ன கதை இது. கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுதுவிட்டேன்.

”இந்தப் படத்தை தயாரித்து நடித்ததற்காக பெருமைப்படுகிறேன்.

”இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள்  மத்தியில் உட்கார வைத்துவிட்டு, தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சிலசமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்றுகூட்டி, அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டேன். ரொம்ப வேதனையாக இருந்தது .

”மகனும், மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளைப் படிக்க வைக்கும் அப்பா, அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்… இப்படி பல நிஜக்கதைகள். நாம் அவர்களை மிக சுலபமாக, “கை-கால் இருக்கே, உழைக்க வேண்டியதுதானே” என்று  திட்டுகிறோம்; அல்லது புறக்கணித்துவிட்டுப் போகிறோம்.

“ஆனால், இன்னொரு வகையில், வாழ்க்கையில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான். பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது. நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன். இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் “என்ன இது…  முதன்முதலா பட விநியோகம் பண்றீங்க…  ‘பிச்சைக்காரன்’ என்ற படத்தை வாங்கறீங்க?’ என்று  கேட்டிருப்பார்கள். ஆனால் அவர் படத்தை நம்பி வாங்கினர்.

“என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை தான் எனக்கு. அவர் இல்லை என்றால் நான் இல்லை.

”இது எல்லோருக்கும் பிடிக்கிற படமாக வந்திருக்கிறது. நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்” என்றார்.