“வீரியம் குறையாத பெரியாரியம்; ஆரிய ஆதிக்கத்தை சாய்த்தே தீரும்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. பெரியர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ”49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம் ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

சமூக நீதி, பெண் கல்வி, சம உரிமை மற்றும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கத்தோடு தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் எ.வ.வேலு, பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும், அரசுத் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்!” என்று பதிவிட்டுள்ளார்.