ஒரு முகத்திரை – விமர்சனம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களால் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை சொல்ல வந்திருக்கிறது ‘ஒரு முகத்திரை’.

கதை நாயகிகளான அதிதி ஆச்சர்யா, ஸ்ருதி ஆகிய இருவரும் ஒரே   கல்லூரியில் மனோநல மருத்துவம் படித்து வருகிறார்கள். கல்லூரியில் எலியும் – பூனையுமாக இருக்கும் அதிதி-ஸ்ருதி  அடிக்கடி சண்டை போடுகிறார்கள்.

அதிதி எப்போதும் பேஸ்புக்கே கதி என்று கிடக்கிறார். பேஸ்புக்கில்  ரோஹித் என்ற இளைஞருடன் தொடர்ந்து பேசி வருவதுடன், தனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தையும் ரோஹித்துடன் பகிர்ந்து  வருகிறார்.

அதிதி – ஸ்ருதி இடையேயான சண்டை ஒருகட்டத்தில் கல்லூரியின் மூத்த பேராசிரியர் வரை வந்ததால் இருவரையும்  சமாதனம் செய்ய அவர் முயல்கிறார். சமாதானத்திற்கு நாயகிகள் இருவரும் ஒத்து வராததால் அவர்களுக்கு ஒரு போட்டி வைக்க அவர் முடிவு செய்கிறார்.

மனோதத்துவத்தில் பிரபல மருத்துவரான ரஹ்மானை, கல்லூரிக்கு அழைத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த  கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் கல்லூரிக்கு வர ரஹ்மான் மறுப்பு தெரிவித்து வருகிறார்.  இந்நிலையில், அதிதி-ஸ்ருதி ஆகிய இருவரும் குறிப்பிட்ட தேதிக்குள் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என்று  கல்லூரியின் தலைமை நிர்வாகியான பாண்டு உத்தரவிடுகிறார்.

அதற்கான முயற்சியில் இருவரும் இறங்கியபோது, அதிதி தனது பேஸ்புக் நண்பரான ரோஹித்தின் உதவியை நாடுகிறார். கடைசியில்  இருவராலும் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர முடியவில்லை. ஆனால், குறிப்பிட்ட அதே தேதியில் ரஹ்மான் கல்லூரிக்கு  வருகிறார். தான் இந்த கல்லூரிக்கு வர அதிதியே காரணம் என்கிறார். அதிதியின் நண்பர் ரோஹித் கேட்டுக் கொண்டதாலேயே தான்  கல்லூரிக்கு வந்ததாக அவர் கூறுகிறார். பின்னர் அங்கு ஒருவாரம் தங்கியிருந்து பயிற்சி வகுப்பு எடுக்கும் ரஹ்மான் அதிதி – ஸ்ருதியை  சேர்த்து வைக்கிறார்.

பின்னர் தோழிகளாக மாறிய அதிதி – ஸ்ருதி இருவரும் கல்லூரி படிப்பை முடித்து வீடு திரும்புகின்றனர். ஆனால் அதிதி தனது வீட்டுக்குச்  செல்லாமல் சென்னையில் உள்ள ரோஹித்தை பார்க்க செல்கிறார். ஆனால் அதிதியை சந்திக்க மறுக்கிறார் ரோஹித். அந்த நேரத்தில்,  அதிதியை சந்திக்கும் ரஹ்மான், அதிதியை தனது வீட்டிலேயே தங்க வைக்கிறார்.

மறுபுறத்தில் படத்தின் ஹீரோவான சுரேஷ் ஒரு பிரபல ஐ.டி.கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அந்த  கம்பெனியில் புதிதாக வேலையில் சேரும் மற்றொரு நாயகியான தேவிகாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் வேறு  கம்பெனிக்கு மாறும் தேவிகா சுரேஷை கழற்றி விடுகிறார். இதனால் வருத்தத்தில், நாயகன் போதை பழக்கத்திற்கு ஆளாகிறார்.  போதை பழக்கத்தில் இருந்து மீள மனோ தத்துவ நிபுணரான ரஹ்மானிடம் சிகிச்சை பெறுகிறார் சுரேஷ்.

அப்போது ரஹ்மான் தான், ரோஹத் என்ற பெயரில் தன்னை ஏமாற்றி வருகிறார் என்ற உண்மை அதிதிக்கு தெரிய வருகிறது. மேலும்  தன்னை வேண்டுமென்றே ரஹ்மான் சென்னை வரவழைத்துள்ளதை தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை அனைத்தையும்  தெரிந்துகொண்ட அதிதியை கொலை செய்ய முடிவு செய்யும் ரஹ்மான், நாயகன் சுரேஷை கொலை செய்ய தூண்டுகிறார்.  கடைசியில் அதிதி என்ன ஆனார்? ரஹ்மானிடம் இருந்து தப்பித்தாரா? ரஹ்மான் ஏன் அதிதியை சென்னை வரவழைத்தார்? ஹீரோ  அதிதியை கொன்றாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிகதை.

படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ள ரஹ்மான் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்.  முந்தைய படங்களில் போலீசாக நடித்த ரஹ்மான் இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக அந்த கதாபாத்திரத்தை அவரது அனுபவ  நடிப்பால் சிறப்பாக ஏற்று நடித்துள்ளார்.

படத்தின் நாயகனான சுரேஷ் ஐ.டி. ஊழியராகவும், காதலராகவும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். நாயகிகளில் ஒருவரான அதிதி திரையில்  சிறப்பாக நடித்துள்ளார். அழகான பெண்ணாக வரும் ஸ்ருதி, அதிதியுடன் சண்டை போடும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். மற்றொரு  நாயகியான தேவிகா அழகான ராட்சசியாக வலம் வருகிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் அனைவரையும் கவரும் தேவிகா, காதலை  தூக்கி எறியும் காட்சியிலும் தனது சுயநலத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

பாலாஜி மற்றும் சுவாமிநாதன் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்திருந்தாலும் காமெடியைப் பொறுத்தவரை இயக்குநர்  கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

படத்தின் இயக்குநர் செந்தில் நாடன் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் உறவால் பெண்கள் மாட்டிக் கொண்டு  பல இன்னல்களை அனுபவிப்பதை சிறப்பாக காட்டியுள்ளார். அதற்கேற்ப படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார்.  விறுவிறுப்புடன் காட்சிகள் இருந்தாலும் வேகம் இல்லாததது படத்திற்கு சற்றே பின்னடைவு. சுரேஷ்-தேவிகா இடையேயான காதல்  காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை பொறுத்தவரை சரவணபாண்டியன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். படத்தை திரையில் காட்ட அவர்  மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

`ஒரு முகத்திரை’ – காலத்துக்கு ஏற்ற விழிப்புணர்வு கதை!