பாலியல் புகார்களை விசாரிக்க ‘விசாகா குழு’ பாணியில் குழு: நடிகர் சங்கம் முடிவு

0a1b‘மீ டூ’ ஹேஷ்டாக்கை பயன்படுத்தி நடிகைகள் பாலியல் புகார்கள் கூறுவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இன்று (29.10.2018) நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு செயற்குழுவில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். அத்தீர்மானங்கள் வருமாறு:

1. அங்கத்தினர்களுடைய உரிமைகளையும், சுயமரியாதையையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ‘விசாகா குழு’ செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும். இது தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் இடம் பெறும் குழுவாக அமையும். பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் இதில் இடம் பெறுவார். இக்குழு ஆண்பால் பெண்பால் பாகுபாடின்றி, பிரச்சினைகளை நடுநிலையோடு அணுகி தீர்வுகளை எடுக்கும்.

2. படப்பிடிப்புத் தளங்களில் ஏற்படும் சகல பிரச்சனைகளையும் உடனடியாகத் தீர்த்து வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.