“ஏழு பேர் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரைப்பதோடு அழுத்தமும் கொடுக்க வேண்டும்!” – பாரதிராஜா

கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக  உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க  முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அஜய்,  ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில்  நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

கேயார் பேசும்போது, “தயாரிப்பாளர் ரகுநாதன் சுயமரியாதை அதிகம் உள்ளவர், அதனாலேயே வீம்பு பிடித்தவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்க மாட்டார். திரையுலகில் 45 வருடங்களை கடந்தும் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது. சினிமா ஒரு பக்கம் அமோகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரொம்பவே மோசமாகவும் இருக்கிறது.. இதை சம்பந்தப்பட்ட்டவர்கள் சரி செய்ய வேண்டும்” என்றார்.

கவிஞர் வெண்ணிலா பேசும்போது, “எனது நண்பர் இயக்குனர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குனர் பாரதிராஜாவை சந்திப்பதற்கான பரிந்துரை கடிதத்துடன் புறப்பட்ட அவர், இன்று தனது கனவை நனவாக்கி, தனது படத்தின் விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது” என்றார்.

m2

சுரேஷ் காமாட்சி பேசும்போது, “கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டுப்போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை தனது படத்தில் அறிமுகப்படுத்தியவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்ப நாளாகவே, இப்போது வரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த ‘மரக்கதக்காடு’ குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.

நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என்றார்

பாரதிராஜா பேசும்போது, “இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடு தான் வந்தேன்.. ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்குச் சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர்.. இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.

இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதில் நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத் தான் சப்பாணியாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன்.. அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.

எங்கெங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த திரையுலகின் சாலையை செப்பனிட போகிறவர்கள் இவர்களை போன்ற இளைஞர்கள் தான்.

மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்து வைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைப்பதோடு நின்று விடாமல் அழுத்தமும் கொடுக்க வேண்டும்.. அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்” என்றார்.

விழாவின் முடிவில் ‘மரகதக்காடு’ இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார்

m3