“தாய்மொழியில் கையெழுத்து போடுவது அவமானம் அல்ல, அது நம் அடையாளம்!” – நடிகர் ஆரி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி, ‘நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல, அடையாளம்’ என உறுதிமொழி ஏற்று, தனது அலுவலகம் சார்ந்த  கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில்  மாற்றி விட்டதாகவும், தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஆரி பேசியதாவது:

இந்த வருடம் (2018) ஜூன் மாதம் 30ஆம் நாள் வட அமெரிக்காவில்,  31-வது தமிழர் திருவிழாவில், ‘உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது’ எனும் முழக்கத்தைத் துவங்கி, 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டு, புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை முன்னெடுத்ததில் பெருமை கொள்கிறது.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, என் வேண்டுகோளுக்கு இணங்கி தம் கையெழுத்தையும் உலக சாதனைக்காக தமிழில் பதிவு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.

அதன்பிறகு தமிழகம் வந்த நான், முதல் கடமையாக வங்கியில் எனது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழில் மாற்றி, ‘தாய்மொழியில் கையெழுத்திடுவோம்’ என்று தமிழகம் முழுக்க பரப்புரை செய்யும் முயற்சியாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் துவங்கினேன்.

இதற்காக மாவட்டந்தோறும் ஒரு பொறுப்பாளரை நியமித்து, அவர்களுக்கு உதவியாக  இரண்டு நபர்களும் பணியாற்ற உள்ளனர் அவர்கள் 8ஆம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழியில் கையொப்பமிடும் வழிமுறைகளைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

அடுத்த நகர்வாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவங்கும் பிரச்சார பேரணி, தமிழகம் முழுவதும் பயணித்து செம்மொழியான தமிழின் பெருமையை உரக்கச் சொல்லும். இப்பேரணி 2019 ஜனவரி 15ஆம் நாள் திருவள்ளுவர் தினத்தன்று குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நிறைவடையும்.

மேலும், வருகிற அக்டோபர் 2ஆம் தேதி ‘மக்கள் பாதை’ அமைப்பு நடத்தும் உலக சாதனை முயற்சி நிகழ்விற்கு முழு ஒத்துழைப்பு தர இருக்கிறோம்.

என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. தமிழ் மொழியை முன்னிறுத்திப் பேசும்  அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும்.

உலகிற்கே தாய்மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான். நம் பிள்ளைகளை டாட்டா பிர்லாவாக்க ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து டாட்டா காண்பித்தோம். ஆனால் அவர்கள் நம் தாய்மொழி தமிழுக்கே டாட்டா காண்பித்து விட்டார்கள்.

ஆங்கிலத்தின் வெறும் 26 எழுத்துக்கள், செம்மொழியான தமிழின் 247 எழுத்துக்களை  தோற்கடித்துவிட்டன.

தாய்மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம். நாம் இந்த உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம்  தாய் மொழியே எம்மொழி பேசுபவராயினும், உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம்.

இவ்வாறு ஆரி பேசினார்.

இந்நிகழ்வின்போது பாடலாசிரியர் “ழ” புகழ் திரு.நீலகண்டன், மாணவர்கள், நடிகர்கள் சௌந்தரராஜன், பிளாக் பாண்டி, விஷ்ணுப்பிரியன், எழுத்தாளர் ஜெயபாலன் ஆகியோர் தங்களது கையெழுத்தை தமிழில் மாற்றுவதாக அறிவித்து கையொப்பமிட்டனர்.

கையொப்பத்தை மாற்றுவதால் ஏற்படும் அலுவல் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஆரியுடன் இணைந்து வழக்கறிஞர் ராஜேஷ், ஆடிட்டர் பாலமுருகன், கனரா வங்கியின் மேலாளர் அசோகன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

ஆரம்பத்திலிருந்தே தமிழில் கையெழுத்துப் போட்டு தம் மொழியை பெருமைப்படுத்திய திருமதி. மீனாட்சி அவர்களின் கரங்களால் “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” போஸ்டர் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.