“குரங்கு பொம்மை’ படத்தில் நடித்த பாரதிராஜாவுக்கு தேசிய விருது நிச்சயம்!” – விதார்த்

பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குரங்கு பொம்மை’. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாயகன் விதார்த், “பாரதிராஜா இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால், அவரது காட்சிகள் படமாக்கப்பட்டபோது அருகில் இருந்து கவனிப்பேன். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக அவர் நிச்சயம் தேசிய விருது நிச்சயம் வாங்குவார்.

“இந்த படம் மிக சிறப்பான படம். நித்திலன் மிக திறமையான இயக்குநர். இந்த படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதோடு, நான் இப்போது பாரதிராஜா இயக்கும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இது எல்லாம் அமைய நித்திலனும் ‘குரங்கு பொம்மை’யும் தான் காரணம். எனவே நித்திலனுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படம் உருவாக என் நண்பர்கள் கண்ணன் மற்றும் கர்ணா ராஜா மிக முக்கியமான காரணம். அவர்கள் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.

“பாரதிராஜா படத்தில் நடிப்பது அவ்வளவு கஷ்டம், சம்பளம் தர மாட்டார், திட்டுவார், அடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால், பாரதிராஜா தான் இயக்கும் படத்தின் கதையை என்னிடம் சொல்லிவிட்டு, உனக்கு இவ்வளவு சம்பளம் தருவேன் என்று ஒரு நல்ல தொகையைச் சொன்னார். நானும் சரி என்றேன். அவர் என்ன தொகை சொன்னாரோ, அதே அளவு தொகை ஒரு கடன்காரருக்கு நான் உடனடியாக கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் அப்போது இருந்தேன். பாரதிராஜா என்னை அழைத்து கதை சொன்னதும், எனக்கு அட்வான்ஸ் பணத்தை செக்காக கொடுத்தார். சம்பளமாக சொன்ன தொகையில் ஒரு கால்வாசியை அட்வான்ஸ் செக்காக கொடுத்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால் சம்பளமாக பேசிய முழுத்தொகையையும் ஒரே செக்’காக கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. உடனே அந்த செக்கை வைத்து என் கடனை திருப்பி கொடுத்து அந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பித்தேன். அதே மாதிரி அவ்வளவு அழகாக, அன்பாக நடிக்கச் சொல்லிக் கொடுத்தார். அந்த படம் வந்ததும் என் வளர்ச்சி அடுத்த லெவலுக்கு கண்டிப்பாக போகும்” என்றார் விதார்த்.

k4

நாயகியாக அறிமுகமாகும் டெல்னா டேவிஸ் இந்நிகழ்ச்சியில் பேசுகையில், முதலில் அனைவருக்கும் மலையாளத்தில் வணக்கம் சொன்னார். பின்னர் சரளமாக தமிழில் பேசிய அவர், “நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொன்னேன் என்றால், நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக வந்திருக்கிறேன், நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத் தான்.

“எனக்கு சினிமா ஆசை சுத்தமா மனதில் கிடையாது. ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன். சினிமா நடிகையாக எவ்வளவு நாள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம், அல்லது உங்களைப் போல ஒரு ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம். ஆனால் நான் என்னவாக ஆனாலும், குரங்கு பொம்மை கதாநாயகி என்று தான் என்னை முதலில் அறிமுகம் செய்துகொள்வேன். அந்த அளவுக்கு இந்த படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை ‘குரங்கு பொம்மை’ வாங்கித் தரும்” என்றார் டெல்னா டேவிஸ்.