“கோ 2’ படத்தில் என்னை நானே பார்க்கிறேன்!” – பாபி சிம்ஹா

வருகின்ற 13ஆம் தேதி உலகெங்கும் கோலாகலமாக வெளிவர இருக்கும் ‘கோ 2’ படத்தின் கதாநாயகன் பாபி சிம்ஹா தனக்கு இந்தப் படம்  பெரிய திருப்பத்தைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கையுடன் இருக்கிறார்.

நிக்கி  கல்ராணி கதாநாயகியாக நடிக்க, RS Infotainment தயாரிக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் மிக பெரிய ஹிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், சக்ரி டோலேட்டி ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள சரத் இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘இந்தப் படத்தில் நான் ஒரு துடிப்புள்ள, உணர்ச்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். மாநிலத்தின் மாபெரும் சக்தி வாய்ந்த  ஒருவருடன்  என் சுயநலத்துக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில்  நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

“தப்பென்று பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்த கதாபாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டி இருப்பது எனக்கு பெருமைதான். ‘கோ 2’ படத்தில் என்னுடைய இந்த கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

“எனக்கும்  நடிப்பு ராட்சசன் பிரகாஷ்ராஜ் சாருக்கும் உள்ள காட்சிகள், திரையரங்கில் தீப்பொறி தெறிக்க வைக்கும் காட்சிகள் ஆகும்.

“இந்த வருடம் முழுவதும் வெளிவர இருக்கும் என்னுடைய படங்கள்,  திரையுலகில் என் நிலையை இன்னும் உயர்த்தும். அதற்கு முன்னோடியாக ‘கோ 2’ படத்தின் வெற்றி இருக்கும்” என உறுதியாக கூறுகிறார் பாபி சிம்ஹா.