ஆர்.கே.நகரில் வசந்திதேவி – திருநங்கை தேவி திடீர் சந்திப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபல கல்வியாளர் வசந்திதேவியும், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கையும் சமூக சேவகியுமான தேவியும் களமிறங்கி இருக்கிறார்கள்.

பிரசாரத்தின்போது, இவர்கள் இருவரும் எதிர்பாராத வகையில் திடீரென சந்தித்து, தேர்தலில் வெற்றிபெற பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்கள்.

இது குறித்து திருநங்கை தேவி கூறியிருப்பது:

இனிய உறவுகளே! ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மதிப்பிற்குரிய அம்மா வசந்திதேவி, இன்று நாம் தமிழர் கட்சியின் எனது வாகன பிரச்சாரத்தின்போது, காரில் சென்றவர், கீழே இறங்கி வந்து என்னை வெற்றி பெற ஆசீர்வதித்தார்.

என்னை சந்திக்க வேண்டும் என்று இவ்வளவு நாள் ஆவலாக இருந்ததாகவும் கூறினார்.

நானும் அவரை வெற்றி பெற வாழ்த்தி வணங்கினேன்.

அரசியல் நாகரீகம் மட்டும் இல்லை இது. எங்கள் தமிழினப் பற்று, எங்கள் தமிழின சொந்தம் என்ற வகையில் இன்று சந்தித்துக் கொண்டது பெருமகிழ்வைத் தருகிறது எனக்கு. எங்கள் இனப்பற்றை எவராலும் பிரிக்க இயலாது என்பதற்கு இன்றைய அம்மாவின் சந்திப்பு சான்று. நாம் தமிழர்.