30ஆம் தேதி வெளியாகும் ‘அச்சமின்றி’ – ஹைலைட்ஸ்!

‘வசந்த் அண்ட் கோ’ நிறுவனர் வசந்தகுமாரின் இளைய மகன் வினோத்குமார் ‘டிரிப்பிள் வி ரெகார்ட்ஸ்’  சார்பில் தயாரிக்க, மூத்த மகன் விஜய் வசந்த் நாயகனாக நடிக்க, கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் இசையமைக்க, ராஜபாண்டி இயக்கிய ‘என்னமோ நடக்குது’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் வினோத்குமார், நாயகன் விஜய் வசந்த், இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன், இயக்குனர் ராஜபாண்டி ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘அச்சமின்றி’.

வருகிற (டிசம்பர்) 30ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில், பிக்பாக்கெட் திருடனாக நாயகன் விஜய் வசந்த் நடித்துள்ளார். நாயகியாக சிருஷ்டி டாங்கே, போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி, வில்லன்களாக பரத்ரெட்டி, ஜெயகுமார், கௌரவ வேடத்தில் ரோகிணி, குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலாஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

0a1

இதுநாள் வரை பெரும்பாலான படங்களில் பாசமான அப்பாவி அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தில் மிரட்டலான வில்லியாக நடித்திருக்கிறார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

இவர்களுடன் கருணாஸ், ராதாரவி, தலைவாசல் விஜய், தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு  – ஏ.வெங்கடேஷ், பாடல்கள்  –  யுகபாரதி, படத்தொகுப்பு – பிரவீன்.கேஎல்.

சின்னச் சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டு, பிக்பாக்கெட் திருடனாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நாயகன் விஜய் வசந்த். அவரை போலீஸ் உளவாளி என தவறாக நினைத்துக்கொள்கிறார் நாயகி சிருஷ்டி டாங்கே. இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். இந்நிலையில், திடீரென அவர்களை ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன், எதற்கு என்று தெரியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கையில், ஒரு குற்றப் புலனாய்வில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனியையும் அதே கும்பல் துரத்துகிறது. மூவரும் சந்திக்கிறார்கள். தங்களை துரத்துகிற கும்பலின் பின்னணியில் பெரிய மனிதர்களின் சதியும், ஊழலும் இருப்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. அதை அவர்கள் எப்படி சமாளித்தார்கள்? குற்றவாளிகளை எப்படி தண்டித்தார்கள்? என்பது தான் ‘அச்சமின்றி’ படத்தின் கதை.

“கல்வித்துறையில் உள்ள ஊழல்களும், அரசியலும் சமூகத்தை எப்படி பாதிக்கிறது? அதற்கான தீர்வு என்ன? என்பதை வணிக அம்சங்கள் கலந்து, விறுவிறுப்பான கிரைம் த்ரில்லராக ‘அச்சமின்றி’ படத்தில் சொல்லியிருக்கிறோம். சமூக அக்கறையும், பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்த இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்கிறார் இதன் இயக்குனர் ராஜபாண்டி.