தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவதூறு: வருத்தம் தெரிவித்தார் விஷால்!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.கல்யாணசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “விஷால் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார். இதை அவர் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால், அவர் பேசியது பத்திரிகையில் செய்தியாக வெளியாகியுள்ளது. இப்போது, தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக விஷால் கூறினால், அவரது இடைநீக்கம் உத்தரவை மீண்டும் பரிசீலிக்கலாம்” என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது குறித்து விஷால் தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் பற்றி கூறிய கருத்துக்கு விஷால் வருத்தம் தெரிவித்தார். அவர் வருத்தம் தெரிவித்த மனு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.