சர்டிபிகேட்டில் சாதியை ஒழித்தால், சாதி ஒழிந்து விடும் என்பது அயோக்கியத்தனம்!

“எனது மகள்களின் பிறப்புச் சான்றிதழ்களில் சாதி, மதப் பெயர்களை குறிப்பிடவில்லை” என்று தோழர் கமல்ஹாசன் தொலைக்காட்சியில் குறிப்பிட்டு இருக்கிறார். பிறப்புச் சான்றிதழில் சாதி பெயரெல்லாம் யாருக்கும் வராது என்ற லாஜிக்கான பதில் இருந்தாலும், கமல்ஹாசன் குறிப்பிட வந்தது, “சாதிக்கு எதிரான மனநிலையால், நான் சாதியைக் குறிப்பிடவில்லை” என்பது.

இந்திய நிலப்பரப்பின் அரசியல் புரியும் வரை, இம்மாதிரி விஷயங்களுக்கு நானும் விசிலடித்து சில்லரையெல்லாம் விட்டெறிந்து இருக்கிறேன். பின்பு கொஞ்சம் உலகம் புரிய ஆரம்பித்தது, அதன்பிறகு தான் இந்த certificate-ல் சாதியை ஒழித்தால், சாதி ஒழிந்து விடும் என்கிற அயோக்கியத்தனமான பிரச்சாரத்தின் ஆபத்தை உணர்ந்தேன்.

தோழர் கமலஹாசன், சாதிக்கென்று சர்டிபிகேட் எடுக்கவில்லையென்றாலும், அவர் ஸ்ரீனிவாச ஐயங்கார் மகன் என்பது ஊருக்கே தெரியும், அவரும் அதைச் சொல்லி இருக்கிறார், “நான் பூணுல் துறந்த பார்ப்பனர்” என்று தன் வாழ்நாளில் ஓராயிரம் முறையாவது சொல்லி இருப்பார், கமலஹாசனை தவிர்த்துவிட்டு, பார்ப்பன சாதியம் என்பது தனித்துவ அடையாளத்தோடு இந்திய நிலப்பரப்பில் சிதறி கிடக்கிறது, அதற்கு சர்டிபிகேட் தேவை கிடையாது. கமலுக்கு பிறப்பிலான privilege உண்மையிலேயே தேவையில்லை என்றால்கூட, vodafone pug நாய் போல, “you & I ” என்று  பாடிக்கொண்டு, wherever you go , I  will be there என்று பின்னால் சாதி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

ஒரு ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு எட்டு வயது சிறுமி, “நீ யாரு கிட்ட டா பாட்டு கத்துகிட்ட?” என்கிற கேள்விக்கு, “நான் பட்டம்மாள் டீச்சராண்ட கத்துண்டு இருக்கேன்”ன்னு, நாலு வார்த்தையிலே, தான் யாரு, எங்கிருந்து வரேன், என்ன பின்புலம் என்பதை அம்பலப்படுத்தும் கலாச்சாரம் – பார்ப்பனிய கலாச்சாரம்.

அவர்களின் சாதிய கலாச்சாரத்தை தக்கவைக்க தனியொரு மெனக்கெடல் தேவையில்லை. ஆனால் யாருக்கு இந்த மெனக்கெடல் தேவையாக இருக்கிறது என்பதை அறிவார்ந்து யோசித்தோமேயானால், விழுப்புரம் கலெக்டர் ஆபிஸ் வாசலில் மாசத்திற்கு ஒரு போராட்டமாவது நடக்கும். அது என்ன போராட்டம் தெரியுமா? திண்டிவனம் சுற்றி இருக்கிற கிராமங்களில் இருக்கும் பல இருளர் சமூகத்து குடும்பங்களுக்கு இன்னும் SC / ST சர்டிபிகேட் கிடைக்காமல், இடஒதுக்கீட்டு பலன் கிடைக்காமல், இன்னும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். கமலஹாசனின் இரண்டு பெண்களுக்கும் இப்படியான சமூகம், மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாது.

அதனால, “இந்த சர்டிபிகேட்டில் குறிப்பிடலை”ன்னு யாரவது சொன்னா, அதுல கொண்டாட எதுவுமில்லை. அது ஒரு சாதனையுமில்லை. ஏனெனில் எந்தவொரு சர்டிபிகேட்டிலும் சாதி சொல்லி நாம உரிமைகளை பெறுவது இல்லை. அரசு வகுப்புவாரியா பிரிச்சி இருக்கு FC, SC, ST, OBC-ன்னு. இதற்கு நாம் எந்த சமூக சர்டிபிகேட் என்கிற ஆதாரம் அவசியம்.

கமல் போன்ற ஆட்களெல்லாம் இவ்வளவு விஷயத்தைச் சொல்ல மாட்டாங்க. “சாதி பாக்க மாட்டோம்”, “மதம் பாக்க மாட்டோம்” என்பது என்றுமே elite கூட்டத்துக்கு ஒரு பேஷன் ஸ்டேட்மெண்ட். ஆனால் club-ல பேசுற விஷயம் வரை, சபா வரை, வீட்ல வைக்குற கொலு வரை, எல்லாத்திலும் சாதி அடையாளம் சர்க்கரை பாவுல ஊற வச்ச ஜாமுன் மாதிரி சிறப்பா இருக்கும்.

இந்த மாதிரி “சர்டிபிகேட்ல சாதி ஒழிக்கப் போறேன்”ன்னு யாராவது சொல்லிட்டு இருந்தா, மண்டையிலே ஒண்ணு அடிச்சி சொல்லி கொடுங்க. caste system ல outcaste ன்னு ஒண்ணு இருந்துச்சி, அண்ணல் அம்பேத்கர் எல்லாம் போராடி, அதிகார ரீதியாகவும், அரசியலமைப்பு சட்ட ரீதியாகவும், புறக்கணிக்கப்பட்ட மக்களை அட்டவணைப்படுத்தி இன்னும் நூறு ஆண்டு கூட ஆகலை, இன்னமும் அட்டவணைப்படுத்தப்படாத மக்களும் இருக்காங்க.

சர்டிபிகேட்டால சாதி ஒழியும்னா, சாதி சர்டிபிகேட் இல்லாத லண்டன் கோர்ட்ல ஏண்டா சாதி சம்ப்ந்தமான வழக்குகள் இருக்குன்னு கேளுங்க…

வாசுகி பாஸ்கர்