“ஜூலி-2’ படம் பார்க்கும் ரசிகர்கள் சில காட்சிகளில் கண் கலங்குவார்கள்!” – ராய் லட்சுமி

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி திரையுலகுகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி, தற்போது இந்தி திரையுலகுக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள இந்திப்படம் ‘ஜூலி-2’.

தமிழிலும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, ராய் லட்சுமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

’ஜூலி-2’ படத்தில், நான் படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு தகவல் பரவியிருக்கிறது இப்படத்தின். ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு அப்படித்தான் சொல்லத் தோன்றும். ஆனால், முழு படத்தையும் பார்ப்பவர்களுக்கு என் கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும். ஓரிரு காட்சிகளில் ரசிகர்கள் நிச்சயம் கண் கலங்குவார்கள்.

படத்தின் கதைப்படி, எனக்கு அப்பா கிடையாது. அம்மா 2-வது திருமணம் செய்து கொள்வார். என் வளர்ப்புத் தந்தை என்னை “வெளியே போய் சம்பாதித்து வா” என்று விரட்டி விடுகிறார். நான் போராடி, சினிமா நடிகை ஆகிவிடுவேன். இது ‘ஜூலி-2’ படத்தின் கதை.

0a1e

என் நிஜ வாழ்க்கையில் நான் 5 முறை காதல் வசப்பட்டு இருக்கிறேன். என் காதலர்களின் பெயர்களைச் சொல்ல முடியாது. அந்த 5 காதல்களும் தோல்வியில் முடிந்து விட்டன. ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போது, என் அறை கதவை பூட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து அழுது இருக்கிறேன்.

சினிமாவில், சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் தான் பட வாய்ப்புகளைப் பெற முடியும் என்று சில நடிகைகள் துணிச்சலுடன் சொல்லி வருகிறார்கள். அது போன்ற அனுபவம் எனக்கு நேரடியாக ஏற்படவில்லை.

‘கற்க கசடற’ என்ற தமிழ் படத்தில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் என்னை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அந்த படம் வெளியானபின், எனக்கு புதிய பட வாய்ப்புகளே வரவில்லை. 4 வருடங்களாகப் போராடினேன். அப்போது எனக்கு மறைமுகமாக அந்த அனுபவம் ஏற்பட்டது. அனுசரித்துப் போகும்படி கூறினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. சம்மதித்து இருந்தால், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆகியிருப்பேன்.

அந்த சமயத்தில், எனக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாது. என்னைப் பற்றி அடுத்தடுத்து வதந்திகளைப் பரப்பினார்கள். அந்த வதந்திகளுக்குப் பின்னால் யாரோ இருந்தார்கள்.

ஆண்களில், நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆர்யா என் நெருங்கிய நண்பர். எங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்து வருகிறது. வெறும் நட்பு மட்டும் தான். அந்த நட்பை பயன்படுத்தி நான் அவரிடம் பட வாய்ப்பு கேட்பதில்லை.

பெண்களுக்கு ஆண்கள் செக்ஸ் தொல்லை கொடுப்பது போல், ஆண்களுக்கும் சில பெண்கள் செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதை நான் அறிந்து வைத்து இருக்கிறேன்.

இவ்வாறு நடிகை ராய் லட்சுமி கூறினார்.