இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த 5 படங்கள் தயாரிக்கிறார் பா.இரஞ்சித்!

’அட்டக்கத்தி’, ’மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் பா.இரஞ்சித், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான  நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும்  வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்,  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன்  இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச தமிழ் சினிமா சந்தைக்கு 5 படங்களை தயாரிக்க இருக்கிறது.

(கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் சமீபத்தில் நடிகர் தனுஷின் “பக்கிரி” திரைப்படத்தை இணைந்து தயாரித்து விநியோகித்தவை என்பதும், இந்த ‘பக்கிரி’ தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட 6 க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகளவில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிட்த்தக்கது).

புதிதாக தயாரிக்கப்படும் 5 படங்களை ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தை இயக்கிய லெனின் பாரதி, ‘பரியேறும் பெருமாள்’ பட்த்தை இயக்கிய மாரி செல்வராஜ், மற்றும் பா.இரஞ்சித்தின் நெருங்கிய ஒத்துழைப்பாளர்களான சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகியோர் இயக்குகிறார்கள்.

இந்த படங்களின் தயாரிப்பு ப் பணிகள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளன.

இந்த அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் பேசும்போது, “சினிமா என்பது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களுடன்  பேசக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஊடகம். ஒரு நல்ல படம் எவ்வாறு பார்வையாளர்களால் ஏற்கப்படுகிறது , மதிக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் இந்த சினிமா துறையில் கண்டிருக்கிறோம். நான் தயாரித்த இரண்டு படங்களையும் மக்களுடன் இணைக்க முடிந்ததற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்..

தமிழ் திரையுலகம் இந்தியாவின் பல்வேறு மொழிகளின் திரையுலகங்களை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்றாகும். பிற மொழிகளில் உள்ள அனைத்து இந்திய படங்களின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் பங்களிப்பில் தமிழ் சினிமா கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது,  தமிழ் படங்கள் நிரூபிக்கப்பட்ட உள்நாட்டு சந்தையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் உள்ள வெளிநாட்டு திரைப்பட சந்தைகளிலும் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தி படங்களைப் போலவே, நம் தமிழ் திரைப்படங்களான வட சென்னை, 96, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய மதிப்பை பெற்றுள்ளன” என்றார்.

லிட்டில் ரெட் கார் பிலிம்ஸின் அதிதி ஆனந்த் பேசுகையில். “நான் எப்போதுமே பா.இரஞ்சித் என்கிற இயக்குனரின் ரசிகர் .ஆனால் ஒரு தயாரிப்பாளராக அவரது அர்ப்பணிப்பால் நான் திகைத்துப் போயிருக்கிறேன், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் என்னை ஆச்சரியப்பட செய்தார், மேலும் அது போன்ற ஒரு தரமான திரைப்படத்தை மீண்டும்  பா இரஞ்சித் மற்றும் எங்கள் அற்புதமான, திறமை வாய்ந்த  இயக்குநர்கள் மூலம் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபயானந்த் சிங் பேசுகையில், “வணிக மற்றும் விமர்சன வெற்றிகளுக்கு இடையில் ஒரு நல்ல சமநிலையை அடைவதற்கான புதிய திறமைகளை இது காண்கிறது என்பதால் நாங்கள் எப்போதும் தமிழ் திரைப்படங்களை பன்முகப்படுத்த விரும்புகிறோம். புதிய இயக்குநர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் உள்ளடக்கிய படங்களை உருவாக்குவதில் பா.இரஞ்சித் போன்ற ஒருவரை இதற்கான தலைமையில் வைத்திருப்பது இன்னும் சுவாரஸ்யமானது” என்றார்.