மூத்த பத்திரிகையாளர் ‘ஞாநி’ சங்கரன் காலமானார்: வாழ்க்கை குறிப்பு

மூத்த பத்திரிகையாளர் ‘ஞாநி’ சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது.

ஞாநியின் உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. பின்னர் ஞாநியின் விருப்பப்படி, அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

1954ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர் சங்கரன். இவரது தந்தை வேம்புசாமி பத்திரிகை துறையில் பணியாற்றியவர். தந்தையின் வழியில் ஞாநியும் பத்திரிகை துறைக்கு வந்தார்.

முதன்முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் தனது பத்திரிகை பயணத்தைத் தொடங்கினார். பின்னர், எதிரொலி உள்ளிட்ட நாளிதழ்களிலும், ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட பல்வேறு வார இதழ்களிலும் பணியாற்றினார். அத்துடன் ‘தீம்தரிகிட’ என்ற இதழையும் சொந்தமாக நடத்தி வந்தார். மேலும், ‘பரீக்‌ஷா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கி, சபா நாடகங்களுக்கு மாற்றாக வீதி நாடகங்கள் நடத்தி வந்தார்.

மனதில் தோன்றிய கருத்துக்களை தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தும் துணிச்சலான அரசியல் விமர்சகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். பத்திரிகை, நாடகம் கடந்து ஃபேஸ்புக், தொலைக்காட்சி விவாதம் என்று பரபரப்பாக இயங்கி வந்தார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அவருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார் ஞாநி. வி.பி.சிங் தமிழக மேடைகளில் பேசும்போது, அவரது ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழிபெயர்ப்பவராக ஞாநி பணியாற்றினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஞாநி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

அவருக்கு பத்மா என்ற மனைவியும், மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மனுஷ் நந்தன் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.