17ஆம் தேதி வெளியாகிறது ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ‘காஸி’!

எப்பொழுதும் தேசப்பற்று படம் என்றாலே மக்கள் மத்தியில் ஆதரவுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தற்போது எடுக்கப்பட்டுள்ள ‘காஸி’ திரைப்படம், யூ சான்றிதழுடன் இம்மாதம் 17ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல் நம் நாட்டின் மீது போர் தொடுக்க, அதை நம் நாட்டு வீரர்கள் எதிர்க்கிறார்கள். அவர்கள் நம் நாட்டை எதிரிகளிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே இப்படம். வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இப்படக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ராணா கதாநாயகனாக நடிக்க, டாப்சி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

0

நீர்மூழ்கி கப்பல் பற்றிய படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் கடலிலும், கடலுக்கு அடியிலும் படமாக்கப்பட்டுள்ளன. கடலில் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டுமல்ல, படத்தில் வரும் கடலடிக் காட்சிகளும் ரசிகர்களுக்கு புதிய காட்சியனுபவத்தைத் தரும் என்கிறது படக் குழு.

சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை, மேட்னி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து பிவிபி சினிமா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்தின் தணிக்கை முடிந்து, யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று  மொழிகளிலும் இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது ‘காஸி’.