ரஜினி பங்கேற்கும் ‘2.0’ படப்பிடிப்பு: பூந்தமல்லியில் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானி, எந்திர மனிதன் ஆகிய இரு தோற்றங்களில் நடித்த ‘எந்திரன்’ படம் 2010-ல் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சி தொடங்கியது.

ஷங்கர் இதற்கான திரைக்கதையை உருவாக்கி, ரஜினியின் சம்மதத்தையும் பெற்றார். ரூ.350 கோடி செலவில் இந்த படத்தை லைக்கா தயாரிப்பது என முடிவானது. இப்படத்துக்கு ‘2.0’ என பெயர் சூட்டப்பட்டது. இதில் கதாநாயகியாக நடிக்க எமிஜாக்சனும், வில்லனாக நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் படப்பிடிப்பு தொடங்கியது. வடபழனி ஸ்டூடியோக்கள், அடையாறு போட் கிளப் போன்ற பகுதிகளிலும் ரஜினி நடிக்க படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் நடப்பது போன்றும், அதில் வில்லனாக வரும் அக்‌ஷய்குமார் ஆக்ரோஷமாக தோன்றுவது போன்றும் காட்சிகளை படமாக்கினார்கள்.

பின்னர், ரஜினி ‘கபாலி’ பட வேலைகளில் ஈடுபட்டதால் ‘2.0’ படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள இயலவில்லை. ஆனாலும் ரஜினி இல்லாமல் மற்ற நடிகர்-நடிகைகள் தோன்றும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வந்தன. 50 சதவீத படப்பிடிப்புகளை முடித்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் கூறினார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஓய்வுக்காக சென்ற ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் அவருக்காக காத்திருந்த ‘2.0’ படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். எனினும், ரஜினி நலமுடன் இருப்பதாகவும், விரைவில் சென்னை திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்ததால் நிம்மதி அடைந்தனர்.

தற்போது ‘கபாலி’ படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினி ஓய்வை முடித்து விட்டு அமெரிக்காவிலிருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து ‘2.0’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படப்பிடிப்பு குழுவினர் தீவிரமாகி உள்ளனர்.

பூந்தமல்லி அருகே பல கோடி ரூபாய் செலவில் சென்னை நகரம் போன்ற அரங்கு அமைத்துள்ளனர். இந்த அரங்கில் பல மாடி கட்டிடங்கள், தார் ரோடுகள், கடை வீதிகள், வணிக வளாகங்கள், ரெயில் நிலையம், எந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞான கூடங்கள் ஆகியவை அரங்குகளாக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அரங்கில் ஓரிரு வாரத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர்.

நவம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. அடுத்த வருடம் ‘2.0’ படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.