திரௌபதி – விமர்சனம்

வன்னியர் சங்கத்தின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், சங்பரிவாரத்தைச் சேர்ந்த சங்கிகளான எச்ச.ராஜாஷர்மா, அர்ஜுன் சம்பத் ஆகியோரை வேண்டி விரும்பி அழைத்துவந்து ‘சிறப்புக்காட்சி’யாக திரையிட்டுக் காட்டப்பட்ட படம் இது. அவர்களும் இந்த பட்த்தைப் பார்த்துவிட்டு, “ஆஹா… ஓஹோ” என பாராட்டி பேட்டி கொடுத்தார்கள். எனில், இப்படம் எத்தனை விஷம் தோய்ந்ததாக இருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

படக்கதை என்னவென்றால், தனது மனைவி திரௌபதியின் தங்கையை ஆணவக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி), ஜாமீனில் வெளியே வருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்துக்கு டீ விற்பவர் போல் வந்து நோட்டமிடும் அவர், அங்கு வரும் வழக்கறிஞர் கருணாவையும், அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அடுத்தடுத்து கொலை செய்கிறார். அவர் எதற்காக இந்தக் கொலைகளை செய்தார் என்ற பின்னணியை பின்கதையாக விரித்துக் கூறுகிறது படம்.

சாதி ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள், சாதிப் பெருமிதம் பேசும் கதாபாத்திரங்கள் படத்தில் தாராளமாக இருக்கின்றன. பட்த்தில் வரும் குறியீடுகளைக் கொண்டே இப்படம் எந்த சாதியை உயர்த்திப் பிடிக்கிறது, எந்த சாதியை மட்டம் தட்டுகிறது என்பதை குழந்தையால்கூட சொல்லிவிட முடியும். ஆனால், தணிக்கைக் குழுவினருக்கு மட்டும் ஏனோ இவை தெரியாமல் போய்விட்டன. உதாரணமாக, “என்ன வம்சத்தில் பிறந்துட்டு இப்படி அழறே?” என்ற வசனத்தில் சீழாய் வடியும் சாதியப் பெருமிதம் தணிக்கைக் குழுவினருக்கு உறுத்தாதது ஏனோ?

மிதிவண்டியில் தேநீர் விற்பவர் போல பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து, தனக்கான இரைகளை பதுங்கியிருந்து தேடும் புலியைப் போல, நாயகன் தனது எதிரிகளைக் கொல்லும் தொடக்கக் காட்சிகளும், கொலைகளை செய்தவரின் அடையாளம் தெரியாத நிலையில், அவரை துருதுருவென நெருங்கும் காவல்துறையின் புலன் விசா ரணையும் முதல்பாதி படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன.

காதலர்களுக்கும், காதலர் அல்லாதவர்களுக்கும் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் பதிவுத் திருமணம் செய்து தரும் தரகர்கள், போலிப் பதிவுத் திருமணங்களை நடத்தி, அந்த திருமணச் சான்றிதழ்களையே ஆயுதமாகக் கொண்டு பணம் பறிக்கும் வேலையை எப்படி திட்டமிட்டு செய்கிறார்கள் என்பதை சித்தரித்துள்ளார் இயக்குநர்.

போலித் திருமணம், நாடகக் காதல் ஆகியவற்றை மையக் கருவாகக் கொண்ட திரைக்கதையில் இயற்கை விவசாயம், கிராமப்புற நலன், தண்ணீர் அரசியல் என சில தற்கால அவசியங்களின் குரலும் ஒலிக்கிறது.

என்றாலும், காதல் என்பது சாதி, மத, இன அடையாளங்களைக் கடந்து செல்லும் உலகப் பொது உணர்வு என்பதைப் பற்றி படத்தில் எந்த இடத்திலும் இயக்குநர் சொல்லவில்லை. இதனால், திரைக்கதை படுபிற்போக்கான சாதிப்பெருமிதம் எனும் திசை நோக்கி குறிவைத்து எய்யப்பட்ட ஆயுதமாகவே இழிந்துவிடுகிறது.

நாயகனின் மனைவியான திரௌபதி, ‘அம்மணம் பெண்களுக்கு மட்டும்தானா? ஏன் உனக்கு இல்லையா?’ என்று பெண்ணியமும், கிராமிய நலமும் பேசினாலும், சாதிப் பெருமிதம் பேசுவதில் அந்தக் கதாபாத்திரம் ஒரு வீராங்கனை போல சித்தரிக்கப்பட்டிருப்பதில், சாதி உணர்ச்சியைத் தூண்டும் ஆபத்தான கதாபாத்திரமாக இரண்டாம் பாதி திரைக்கதையில் அது அழுத்தமாகப் படர்ந்து கிடக்கிறது.

ஒடுக்கப்பட்டு, நொறுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளைப் பேசுவதன் மூலம் அவர்களது சமூக விடுதலையை முன்னெடுக்க சினிமா எனும் சாதனத்தைப் பலரும் பயன்படுத்தி வரும் வேளையில், உதறி எறிய வேண்டிய சாதிய வன்மத்தை பரப்ப இயக்குநர் அதே சாதனத்தை தேர்ந்தெடுந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

ஒருசில இடங்களில் நடந்த தவறான உதாரணங்களை எடுத்துக கொண்டு, காதல் திருமணங்கள் எல்லாமே பெற்றோருக்கு பெரிய அச்சுறுத்தல்தான் என்பது போல தவறாக காட்டுகிறது படம்.

குடிசை கொளுத்திகளும், பிரியாணியை அண்டாவோடு களவாடிச் செல்பவர்களும், இவர்களின் வெறித்தனமான ஆதரவாளர்களும் இப்படத்தைக் கண்டு களிக்கலாம்!