கனமழைக்காக காத்திருக்கிறது தரணிதரன் – ஷிரிஷ் கூட்டணி!

‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய தரணிதரன், அடுத்து ‘மெட்ரோ’ திரைப்படத்தின் நாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து, மர்மத்தை மையமாகக்கொண்டு உருவாகும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், கனமழைக்கு ஒரு மிக முக்கிய பங்கு இருக்கிறது. எனவே, வருகின்ற டிசம்பர் மாதத்தில் (மழை காலத்தில்) இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் தரணிதரன்.

இப்படத்தில் நடிக்க இருப்பது குறித்து நடிகர் ஷிரிஷ் கூறுகையில், “பர்மா’, ‘ஜாக்சன் துரை’ படங்களின் கதை களங்களைப் பார்த்து நான் வியந்து இருக்கிறேன். என் மீது முழு நம்பிக்கை வைத்து, என்னை இந்த திரைப்படத்திற்கு தேர்வு செய்த இயக்குனர் தரணிதரன் சாருக்கு  எனது நன்றி. ஒரு கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை எப்படி வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம் என்பது தான் இந்த படத்தின் கதை கரு. என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான மைல் கல்லாக அமைய இருக்கும் இந்த படத்தில் பணியாற்றுவதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி” என்றார்.