“ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது!” – தீபா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், எனது பாட்டியின் பெயரிலான பாரம்பரிய சொத்து. அதில் எனக்கும் பங்கு இருக்கிறது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு தீபா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் சொத்து குறித்து இதுவரை நான் எந்த உரிமையும் கோரவில்லை. எனக்கு பணம், புகழ் ஆகியவற்றில் நாட்டமில்லை என்ற போதிலும், என் பாட்டி பெயரிலான சொத்து என்பதால் அது எங்கள் பாரம்பரியம் என்று நம்புகிறேன். பரம்பரை சொத்து என்பது சட்டப்படி வாரிசுகளுக்கு சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் சரிசமமான பங்கைப் பெற பெண்களுக்கும் உரிமை உள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மற்றவர்கள் கேட்பது போலவே மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து விரிவான அறிக்கை தேவை என்று நினைக்கிறேன். சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றோ, கேள்விகளையோ எழுப்பவில்லை. அப்போலோ மருத்துவமனை மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் உலகத் தரத்திலான சிகிச்சை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அவரை போற்றிய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.