விளையாட்டு வீரரை தாக்கியதாக புகார்: சூர்யா கைது செய்யப்படுவாரா?

நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக பிரேம்குமார் என்ற கால்பந்து விளையாட்டு வீரர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை போலீஸ் பதிவு செய்துள்ளது. அடுத்து இந்த புகாரின் பேரில் சூர்யா கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கால்பந்து விளையாட்டு வீரரான பிரேம்குமாரும், அவரது நண்பரும் நேற்று அடையார் கால்பந்து விளையாட்டு மைதானத்திலிருந்து மோட்டார் பைக்கில் போயிருக்கிறார்கள். பிராட்வேக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது அவர்களது பைக், முன்னால் சென்ற காரின் மீது மோதியுள்ளது. அந்தக் கார் திடீரென பிரேக் அடித்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது

மோதிய அதிர்ச்சியில் பிரேம்குமார் கீழே விழுந்துள்ளார். காரை விட்டு இறங்கிய பெண்மணி இவர்களை திட்டியுள்ளார். அங்கிருந்த சில கடைக்காரர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அப்போது அந்தப் பக்கம் காரில் வந்த நடிகர் சூர்யா, தனது வண்டியிலிருந்து இறங்கி வந்து, பெண்மணிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, பிரேம்குமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “நடுரோட்டில் பெண்மணியிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்?” என திட்டினாராம்.

தான் தாக்கப்பட்டது குறித்து பிரேம்குமார் போலீசில் புகார் செய்துள்ளார். இந்தப் புகார் சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து இந்த புகாரின் பேரில் சூர்யா கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து சூர்யா தரப்பும் விளக்கம் அளித்துள்ளது. “அந்த இளைஞர்கள் இருவரும் ஒரு வயதான பெண்மணியை பைக்கில் இடித்துள்ளனர். இடித்ததோடு அந்தப் பெண்மணியை அச்சுறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியே சென்ற சூர்யா வண்டியை நிறுத்தி இந்த இளைஞர்களை கேள்வி கேட்டுள்ளார். உடனே அது குறித்து காவல்துறையிடமும் தகவல் அளித்துவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவர் அங்கு இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, அவருக்கெதிராகவே இந்த இளைஞர்கள் இருவரும் புகார் பதிவு செய்துள்ளனர்” என்கிறது சூர்யா தரப்பு.