“தமிழகத்தை விட்டு வெளியேறு”: ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை 24 இயக்கங்கள் முற்றுகை!

சமீபகாலமாக அதிகரித்துவரும் இந்துத்துவ அச்சுறுத்தலையும், அட்டூழியங்களையும் எதிர்கொள்வதற்காக சில தினங்களுக்குமுன் ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்கம்’ சென்னையில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 24க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

இந்த ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்க’த்தைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர், இன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம், திருமுருகன் தலைமையிலான மே 17 இயக்கம், மற்றும் காஞ்சிபுரம் மக்கள் மன்றம், ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

0a

“இது தமிழர் பூமி! ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவாவே… தமிழகத்தை விட்டு வெளியேறு”, “இது பெரியார் பூமி! நாங்கள் தமிழர்கள்! காவி எங்கள் நிறமல்ல; கருப்பே எங்கள் நிறம்” என்பன போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்களையும், பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு காரணமான மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ கண்டித்தும், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கக் கோரியும், ராம்குமார் மரண‌த்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க வற்புறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினார்கள்.

0a1

இப்போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய‌ தலைவர் மோகன் பகவத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவின் படம் செருப்பால் அடிக்கப்பட்டது.

இந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.