‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 1)

கோவையில் நடைபெற்ற ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சியில், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர், தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு பதிலாக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர்.

கோவையில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பாக வட்டமேசை விவாத நிகழ்ச்சி எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் வெள்ளியன்று (8ஆம் தேதி) மாலை 6 மணிக்குத் துவங்கியது. ‘தொடர் போராட்டங்கள் : அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களுக்காகவா? என்பது விவாதத்துக்கான தலைப்பு.

இதில், ‘அரசியல் காரணங்களுக்காகவே’ என்று பேச பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக சார்பில் செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், இந்திய குடியரசு கட்சி சார்பில் செ.கு.தமிழரசன் ஆகியோர் வந்திருந்தனர்.

‘அடிப்படை உரிமைகளுக்காகவே என்று பேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கொங்கு நாடு இளைஞர் பேரவை சார்பில் உ.தனியரசு, மற்றும் இயக்குநரும், நடிகருமான அமீர் ஆகியோர் வந்திருந்தனர்.

விவாத நிகழ்ச்சியை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் காத்திகை செல்வன் நெறிப்படுத்தினார். அவர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப் பேசுகையில், “ஒவ்வொருவரும் முதல் சுற்றில் தங்களின் கருத்தை எவ்வித இடையூறுமின்றி 5 நிமிடம் பேசுங்கள்.. அதற்கு அடுத்த சுற்றில் விவாதத்தை கொண்டு செல்லலாம்” எனக் கூறிவிட்டு, திமுக சார்பில் பேச டி.கே.எஸ்.இளங்கோவனை அழைத்தார்.

டி.கே.எஸ்.இளங்கோவன், “நாட்டின் விடுதலை துவங்கி எல்லாமே போராட்டத்தால் தான் பெறப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் நல்ல தண்ணீர் வேண்டும், நல்ல காற்று வேண்டும் என கேட்டு போராடுவது குற்றமா?” என்ற ரீதியில் பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்டி பேசி முடித்தார்.

அதன் பின்னர் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தராஜனை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார். அப்போது பேசிய தமிழிசை, “தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம். போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர். 24 வருடமாக இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கத் தானே செய்தது. அப்போது போராடாதவர்கள் இப்போது ஏன் இப்படி போராடுகிறார்கள்? இப்போது ஏன் வன்முறை வெடிக்கிறது?” என வழக்கமான பல்லவியை பாடினார்..அப்போது எதிரிலிருந்த கே.பாலகிருஷ்ணனை பார்த்தவுடன், “இந்த கம்யூனிஸ்ட்கள் இங்கே (தமிழகத்தில்) கெயில் குழாய் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் ஆளும் கேரளாவில் கெயில் திட்டத்தை ஆதரிக்கின்றனர். அவர்களது ஆட்சியின் சாதனையில் அதனை குறிப்பிட்டு விளம்பரமும் செய்கின்றனர். கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியதால் தான் தொழிற்சாலைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கிறது” என மூச்சு விடாமல் பேசி முடித்தார்.

நெறியாளர் கார்த்திகை செல்வன் அடுத்து கே.பாலகிருஷ்ணனை பேச அழைத்தார். கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “இந்த கொங்கு மண் போராட்டத்தால் சிவந்த மண். திருப்பூர் குமரன் கையில் கொடியோடு போராடி வீழ்ந்தான். ஸ்டென்ஸ் மில் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கிறது. போராடிய தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆலை முதலாளிகளை எதிர்த்த தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நடைபெற்ற மண் இந்த கோவை. விவசாயிகளைத் திரட்டி போராடிய நராயணசாமி நாயுடு இந்த மண்ணை சேர்ந்தவர்தான்.. உழைப்பாளர்களை திரட்டி போராடிய எங்கள் தோழர் ரமணி உள்ளிட்ட பல்வேறு போராட்ட தலைவர்கள் வாழ்ந்த மண் இந்தமண். அம்மையார் தமிழிசை எந்த மண்ணில் இருந்து போராட்டத்திற்கு எதிராக பேசுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். (அரங்கம் அதிர கைதட்டல்) அழுத குழந்தைதான் பால் குடிக்கும். போராடினால் தான் உரிமைகளைப் பெற முடியும். குழந்தை கூட அழும்போதுதான் தாய் பால் கொடுக்கிறார். குழந்தை சும்மா இருக்கும்போது பால் கொடுப்பதில்லை. குழந்தைகூட அழுது போராடிதான் உரிமையை பெறுகிறது. போராடுவது ஒவ்வொருவரின் உரிமை.(வீசில் சப்தம் காதைப் பிளக்கிறது) தமிழிசை அம்மையார் கேட்கிறார், 24 வருடமாக சும்மா இருந்தவர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள்? என்ன நியாயம்? என்று கேட்கிறார்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரியுமா?
இந்தியாவில் பிரிட்டிஷ்காரன் கூட 200 ஆண்டுகாலமாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான். ஆனால் 1947 ல் தான் விடுதலை கிடைத்தது. அப்போது, இவ்வளவு நாளாக அடிமையாக இருந்த இந்தியர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என பிரிட்டீஷ்காரன் கேட்டால் எப்படி இக்குமோ அதேபோல் தான் இருக்கிறது. தமிழிசையின் கருத்து.” ( அரங்கமே அதிர்கிறது)

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழிசை : … குறுக்கிட்டு பேசவிடாமல் செய்ய முயன்றார். “நான் சுதந்திர போராட்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவள்” என்றார்.

கே.பாலகிருஷ்ணன்: கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. பொறுமை வேண்டும்.. என்னை பதில் சொல்ல அனுமதியுங்கள்..

(கார்த்திகை செல்வன் தலையிடுகிறார்..)

கே.பாலகிருஷ்ணன்: அடுத்து சொன்னாங்க… கம்யூனிஸ்ட்கள் கேரளாவில் கெயிலை ஆதரிக்கிறார்கள். இங்கே எதிர்க்கிறார்கள் என்று.. உண்மைதான்.. கேரளாவில் கெயில் பைப் லைன் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் வீட்டிற்குள் பைப் லைன் வருகிறது. விவசாய நிலத்தில் வருகிறது. அதனால் தான் எதிர்க்கிறோம்.. நாங்கள் கெயில் பைப் லைன் திட்டம் வேண்டாம் என கூறவில்லை.. விவசாயிகளின் விளைநிலத்தையும், வீட்டையும் அழித்து வேண்டாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஏன் கெயில் நிறுவனம் கேரளாவில் ஒரு நிலைபாடும், தமிழகத்தில் ஒரு நிலைபாடும் எடுக்க வேண்டும்? அதனை பாஜக ஏன் ஆதரிக்க வேண்டும்? தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு கூட கொடுக்க வேண்டியதில்லையே… அது அரசின் நிலம் தானே. அதில் உங்களுக்கென்ன சிரமம்? இதில் இரு நிலை எடுப்பது கம்யூனிஸ்ட்களா? அல்லது பாஜகவா? (அரங்கத்தின் ஆரவாரம்). கம்யூனிஸ்ட்கள் போராடியதால் தான் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறார் தமிழிசை.. நான் கேட்கிறேன்… சென்னையில் ஹூண்டாய், நோக்கியா நிறுவனங்கள மூடியது.. நாங்கள் போராட்டம் நடத்தியதாலா? அரசின் சலுகைகளை பெற்று கொண்டு லாபம் ஈட்டியவுடன் அவை ஓட்டம் பிடித்தன.. நாட்டில் இதுவரை மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராடியதால் தான் மூடப்பட்டிருக்கிறதா.? பாஜக ஸ்டெர்லைட் ஆலையிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, போராடிய மக்களுக்கு எதிராக, போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறது….

தமிழிசை: இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன்… இதற்கு ஆதாரம் இருக்கிறதா? ( நாற்காலியின் முனைக்கு வந்து கத்தினார்.)

கே.பாலகிருஷ்ணன்: தமிழிசை, கொஞ்சம் பொறுமையாக இருங்க… ஆதாரம் இருக்கிறது… சொல்கிறேன் கேளுங்கள்…

(அவரை பேசவிடாமல் தமிழிசை மீண்டும் கத்தி ஏதோ சொல்கிறார்)

கார்த்திகை செல்வன் (தமிழிசையை பார்த்து): அமைதியாக இருங்கள் நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம். . அதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அவரை பேச அனுமதியுங்கள் …

கே.பாலகிருஷ்ணன்: ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுமத்திடம் இந்தியாவிலேயே அதிகமாக நன்கொடை பெற்ற கட்சி பாஜக. அந்த பணத்தை பெற்றுக்கொண்டு தானே இன்று தூத்துக்குடியில் போராடிய மக்களுக்கு எதிராக பேசுகின்றனர்… இங்கே யார் சமூக விரோதி .. ? பாஜக வேதாந்தா குழுமத்திடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது குறித்த வழக்குகூட நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்வேறு அமைப்புகள் வேதாந்தா குழுமத்திடம் எவ்வளவு நன்கொடை, யார் யார் வாங்கியிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. அது பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது..

(தமிழிசை மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு ஏதோ சொல்கிறார்…)

கே.பாலகிருஷ்ணன்: நான் சொல்கிறேன்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த நன்கொடையும் பெற்றதில்லை.. தமிழிசை பாஜக எந்த நன்கொடையும் பெறவில்லை என்று கூற முடியுமா? எங்கள் கட்சிப் பத்திரிகைக்கு வேதாந்தா குழுமம் விளம்பரம் தந்தபோது அதனை பிரசுரிக்க முடியாது என மறுத்த இயக்கம்.. வேதாந்தா விளம்பரத்தை வெளியிடாத ஒரே பத்திரிகை எங்கள் பத்திரிகை ‘தீக்கதிர்’…

(தமிழிசை குறுக்கிட்டு “உண்டியல் குலுக்கிகள்… வெளிநாட்டில் இருந்து பணம்… என ஏதேதோ கத்தினார். உடனே கே.பாலகிருஷ்ணனின் பேச்சுக்கு ஆதரவாக அரங்கமே ஆர்ப்பரித்து தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்..)

கே.பாலகிருஷ்ணன்: அம்மையார் தமிழிசை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்… நான் அதற்கும் பதில் சொல்கிறேன்.. ஆம்.. நாங்கள்.. உண்டியல் குலுக்கிகள் தான்… எங்கள் முழுநேர ஊழியர்களின் அலவன்ஸ்க்கு கூட உண்டியல் குலுக்கி அந்த காசைத் தான் தருகிறோம்.. அதனை மக்களிடம் சென்று உண்டியல் ஏந்தி நேர்மையாக கேட்கிறோம்.. அதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. அதற்காக நாங்கள் பெருமை படுகிறோம்…. ஆனால், பாஜக போன்று ஸ்டெர்லைட், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களிடமும், பெருமுதலாளிகளிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்காக வாலாட்டிக்கொண்டு திரிய மாட்டோம்… (அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது). இன்றைக்கு மூடும் ஸ்டெர்லைட் ஆலையை, மக்கள் 99 நாள் போராடியபோது மூடியிருந்தால் இந்த 13 பேர் உயிரிழப்பே ஏற்பட்டிருக்காது.. அப்ப இந்த உயிரிழப்பிற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம்… போராடும் மனிதன் தான் முழுமையான மனிதன்.. போராடாத மனிதன் அரைகுறை மனிதன் (என முத்தாய்ப்பாக முடித்தார்.)

அதன்பின்னர் நெறியாளர் கார்த்திகை செல்வன் அதிமுக சார்பில் செம்மலையை பேச அழைத்தார். செம்மலை நேரடியாக பதில் அளிக்க முடியாமல் சிகாகோ வரை சென்று பார்த்தார். ஆனால் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் பொறுமை இழந்து, “பேசியது போதும் முடியுங்கள்” என குரல் கொடுத்தனர்.. அப்படியே கேரளாவிற்கு தாவிய செம்மலை, “கேரளாவிலும் விவசாய நிலத்தில்தான் கெயில் பைப் லைன் பதித்திருப்பதாக செய்தித்தாளில் பார்த்தேன். அங்கு மக்களை தூண்டிவிட ஆள் இல்லை. அதனால் போராட்டம் நடப்பதில்லை” என்று கூறி மீண்டும் எங்கெங்கோ சென்றார்..

நெறியாளர் காத்திகை செல்வன் இடையில் குறுக்கிட்டு பெரும் பாடுபட்டு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திற்கு அழைத்து வந்தார். அப்போது செம்மலை, “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள்… ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்” என்று கூறினார். கார்த்திகை செல்வன் குறுக்கிட்டு, “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆட்டோவிற்கு தீ வைத்தது யார் என்பதை நீங்களும் வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள் பின் ஏன் சமூக விரோதிகள் என போராடியவர்கள் மீது பழி போராடுகிறீர்கள்?” என கேட்டு, நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்க கூறினார்… இறுதிவரை கார்த்திகை செல்வன் ‘சமூக விரோதி’ போல் போராடி, செம்மலையிடம் பதிலை பெற முயன்றார்… ஆனாலும் முடியவில்லை.

அடுத்ததாக, அதே அணியில் இருந்த தமாகா-வின் ஞானதேசிகனை பேச அழைத்தார்…

ஞானதேசிகன், அரங்கத்தில் பாஜக – அதிமுகவிற்கு எழுந்த எதிர்ப்பிற்கும், எதிர்முகாமில் இருந்தவர்கள் கொடுத்த பதிலடிக்கும் எப்படியாவது ஒத்தடம் கொடுத்து தேற்ற வேண்டும் என்ற பாணியில், தூப்பாக்கி சூட்டிற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என வாதிட முயற்சித்தார். அப்போது, “தமிழக ஊடகங்கள் காவலர்கள் தாக்கப்படுவதை திட்டமிட்டு வெளியிடவில்லை.. ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன… போராட்டக்காரர்களின் கையில் தடி எப்படி வந்தது.. கல் எப்படி வந்தது?” என்றார்..

கார்த்திகை செல்வன்: அப்படியில்லை.. காவலர்களை தாக்கும் வீடியோவை நாங்களும் ஒளிபரப்பினோம்.. நீங்க பார்க்கவில்லை போலும்..

ஞானதேசிகன்: நான் உங்களை சொல்லவில்லை சில ஊடகங்களை சொன்னேன்.. (என்று அதிலிருந்து நழுவி.. மீண்டும் தொடர்ந்தார்…) துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் இருக்கிறார்.. உசிலம்பட்டியில் இருப்பவருக்கு தூத்துக்குடியில் என்ன வேலை?.. இவர் எப்படி அங்கு சென்றார்.. ? (என நீதிமன்றத்தில் குற்றவாளியை மடக்கி விட்டதாக நினைத்து பேசுவது போல் பேசினார்..)

காத்திகை செல்வன் : ஏன் தூத்துக்குடி மக்களுக்காக உசிலம்பட்டிக்காரர் போராடக் கூடாதா… ? ஏன் அரசியல் கட்சிகள் மற்ற பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்காக போராடுவது இல்லையா..?

ஞானதேசிகன்: ஆனால் அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் ஓர் அமைப்பை சேர்ந்தவர்..

காத்திகை செல்வன்: ஏன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடக்கூடாதா….?

ஞானதேசிகன் : கூடாது.. (மக்கள் கடும் எதிர்ப்பு குரல்… “நீ எதற்காக இங்கே பேச வந்தாய்… உன் கட்சியில் இங்கே ஆள் இல்லையா…? “)

ஞானதேசிகன் (தொடர்ந்து): எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, காமராஜர் என எல்லா ஆட்சியிலும் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது (என கூறி 13 பேர் படுகொலையையும் நியாயப்படுத்த முயன்றார். மேலும், “காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதியா…?” என ஜல்லிக்கட்டு சம்பவத்தையொட்டி ஆட்டோவிற்கு தீ வைத்த போலீசையும் புனிதராக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு அரங்கத்தில் இருந்தவர்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது.. அப்படியும், இப்படியும் வாதாடி பார்த்தார்… எதுவும் எடுபடவில்லை..

அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்…

(மீதி இரண்டாம் பகுதியில்)