அரவிந்த்சாமி – அமலா பால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் இசை வெளியீடு!

அரவிந்த்சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ரஸ்கல்’ படத்தின் ரீமேக்காக இது உருவாகி வருகிறது. ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் நாயகன் அரவிந்த்சாமி, நாயகி அமலா பால், இயக்குனர் சித்திக் மற்றும் ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா, இசையமைப்பாளர் அம்ரேஷ் ஆகியோருடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ராவும் கலந்து கொண்டார்.

0a1e

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பேசுகையில், “பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. அட்வான்ஸ் தொகை வாங்காமலேயே அரவிந்த்சாமி இப்படத்தில் நடித்துக் கொடுத்தார். இயக்குனர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் படத்திற்கு நன்றாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது” என்றார்.

நடிகர் அரவிந்த்சாமி பேசுகையில், “இயக்குனர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் – இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ சங்கர் மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் சேர்ந்து நானும் சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஜெயச்சித்ரா பேசுகையில், “அம்ரேஷ் எனது மகன். இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் நிற்க செய்துள்ளார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப்பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த அறிஞர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.