எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்
எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்.
இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரம்பூர் பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பியபோது வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இன்று (ஜூன்.3) அதிகாலை 5.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் உயிரிழந்து இருக்கிறார்.
தினகரன், சூர்யா, சக்திவேல் ஆகிய 3 பேருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
