நடிகை அக்ஷயா இயக்கும் ரொமாண்டிக் திரில்லர் படம் ‘யாளி’

ஏபி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.டி. தயாரித்திருக்கும் படம் ‘யாளி’

இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இப்படத்தை இயக்கியிருக்கிறார் அக்ஷயா. இவர் ஆரியா நடித்த ‘கலாபக்காதலன்’, விஜயகாந்த் நடித்த   ‘எங்கள் ஆசான்’, டாக்டர் கலைஞர் கதை – வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’ போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன் – அக்ஷயாவுடன் ஊர்வசி, மனோபாலா ஆகியோரும், அர்ஜுன் என்ற புதுமுகமும்  நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது:

பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன்.  இந்த படத்தை ஒரு ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி (அக்ஷயா), நாயகன் (தமன்) இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா (புதுமுகம் அர்ஜுன்) என்ற இளைஞர் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர்? எதற்காக ஜனனியை பின் தொடர்கிறார்? அந்த நேரத்தில் மும்பையில் நடக்கும் தொடர் கொலைச் சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் ஜனனி என்ன ஆனார் என்பது தான் இப்படத்தின் கதை. விறுவிறுப்பான திரைக்கதை ரசிக்கும்படியாக இருக்கும்.

படப்பிடிப்பு மும்பை, மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது, ஜூன் மாதம் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஜூலை மாதம் படம்  திரைக்கு வர உள்ளது.

இவ்வாறு அக்ஷயா கூறினார்.

ஒளிப்பதிவு – வி.கே.ராமராஜூ

இசை – எஸ்.ஆர்.ராம்

பாடல்கள் – வைரமுத்து, கவிதாவாணி வி.லட்சுமி

எடிட்டிங் – அஹமது, சந்துரு

மக்கள் தொடர்பு – மணவை புவன்.

இணை இயக்கம் – உன்னி பிரணவம்

இணை தயாரிப்பு – கவிதாவாணி வி.லட்சுமி

y8