‘2 பாய்ண்ட் ஓ’ படத்தை முறைகேடாக இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள ‘2 பாய்ண்ட் ஓ’ திரைப்படத்தை முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ரூ.450 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிப்பில், பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியிருக்கும் ‘2 பாய்ண்ட் ஓ’ திரைப்படம் வருகிற (நவம்பர்) 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘2 பாய்ண்ட் ஓ’ திரைப்படம் முறைகேடாக இணையதளத்தில் வெளியிடப்பட்டால் மிக பெரிய அளவில் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் எனவே முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதி சுந்தர், ‘2 பாய்ண்ட் ஓ’ படத்தை இணையதளத்தில் வெளியிட 3000 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.