பத்ம சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும்: நடிகர் விஷால் ஆவேசம்

பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தூக்கிலிட வேண்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை சாதி பிரச்சனையாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை கே.கே. நகரில் இருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் வேலை செய்யும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜகோபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜகோபாலனை சும்மாவிடக் கூடாது என்று திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தானும், மகள் மதுவந்தியும் பள்ளியை நடத்தவில்லை என்றும், வெறும் டிரஸ்டி தான் என்றும் ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்துள்ளார்.

பத்ம சேஷாத்ரி பள்ளி பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் இது குறித்து விஷால் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் விஷால் கூறியிருப்பதாவது:

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது என்னை தலைகுனிய வைத்தது. மேலும் அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. மாணவிகளிடமோ, பெற்றோரிடமோ ஒருவர் கூட ஒருமுறை கூட மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற குற்றங்களை லேசில் விடக் கூடாது. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு என் நண்பரான பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தை சாதிப் பிரச்சனையாக மாற்றுவது வெட்கக்கேடு. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியரை தூக்கிலிட வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற குற்றங்களை உடனே கவனிக்க வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் புரியும்.

தற்போதாவது மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். மேலும் இதை சாதி பிரச்சனையாக்க வேண்டாம்.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.