“விசாரணை’யின் முதல் பாதி மட்டுமே ‘லாக்கப்’ புத்தகம்!” – வெற்றிமாறன்

“விசாரணை’ படத்தின் முதல் பாதி மட்டுமே கோவை ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி இருக்கும். இரண்டாம் பாதி வேறு சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்ப்பவர்களுக்கு ‘விசாரணை’ ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்று அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விசாரணை’. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது.

நாளை (5ஆம் தேதி) திரைக்கு வரவிருக்கும் ‘விசாரணை’ படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள சில தகவல்கள்:

* ‘விசாரணை’ படம் ஆரம்பித்ததற்கான காரணமே குறுகிய காலத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று தான். அப்போது தனுஷை வைத்து ‘சூதாடி’ என்று ஒரு படம் பண்ணிட்டு இருந்தேன். இடையே தனுஷ் வேறு ஒரு படப்பிடிப்புக்கு 5 மாதம் சென்றார். அந்த இடைவெளியில் குறுகிய காலத்தில் பண்ண ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘விசாரணை’.

* என் நண்பர் கொடுத்த ‘லாக்கப்’ புத்தகத்தை படித்தேன். அதைப் படித்த பிறகு, கண்டிப்பாக இதை ஒரு நல்ல படமாக எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. படத்தின் தயாரிப்பாளர் கதையே கேட்காமல் பொருட்செலவு பற்றி மட்டும் கேட்டதையும், நாயகன் கதையே கேட்காமல் நாட்கள் ஒதுக்கியதையும் என்னால் மறக்க முடியாது. இப்படி ஒரு சூழல் எந்த இயக்குநருக்கு அமையும்?

* ‘விசாரணை’ ஆரம்பிக்கும்போது கொஞ்சம் பயத்தோடு தான் ஆரம்பித்தேன். ஆனால், இப்போது நானே எதிர்பார்க்காத அளவுக்கு இப்படம் பெரிதாகிவிட்டது.

* தினேஷ் எதைச் சொன்னாலும் செய்யக் கூடிய அர்ப்பணிப்புமிக்க நடிகர். அவருடன் வரக்கூடிய நண்பர் வேடத்துக்கு முருகதாஸ் சரியாக இருக்கும் என்று தோன்றியது, உடனே ஒப்பந்தம் பண்ணி படப்பிடிப்புக்கு போய்விட்டோம். படத்தின் முதல் பாதி ஆந்திராவிலும், இரண்டாம் பாதி தமிழ்நாட்டிலும் படமாக்கி இருக்கிறோம்.

* இப்படத்தில் தினேஷ் – ஆனந்தி சம்பந்தப்பட்ட சில காதல் காட்சிகள் இருக்கிறது. அக்காட்சி ஏன் என்றால் சாமானியனுடைய வாழ்க்கையில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை உணர்த்துவதற்காகத் தான். ஆனந்தியின் இயல்பான பேச்சு, நடிப்பை வெளிக்காட்டும் திறன் என்னை மிகவும் கவர்ந்தது. அவங்ககிட்ட அவங்க வரும் காட்சிகள் மட்டும் சொன்னேன், உடனே நடிக்க சம்மதித்து விட்டார்கள்.

* சமுத்திரக்கனி, சரவண சுப்பையா, ராமதாஸ், தயா, செந்தில் என இப்படத்தில் ஆறு இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள்.

* படத்தின் ஒரு காட்சியை எழுதும்போது, இதற்கு பின்னணி இசை இப்படி இருக்கலாம் என்று ஒரு எண்ணம் இருக்கும். இப்படத்தில் எனக்கு அப்படி ஒரு எண்ணமே வரவில்லை. ஜி.வி.பிரகாஷிடம் என்ன பண்றதுனு கேட்டேன். “படத்தின் முழு ஒலி அமைப்பு பணிகளையும் முடிச்சுட்டு கொடுங்கள். நான் என்ன பண்ணலாம்னு பாக்கறேன்” என்று சொன்னார் ஜி.வி.பிரகாஷ். அனைத்தையும் முடித்து கொடுத்தவுடன் இசையமைத்தார்.

* படத்தில் வரும் வன்முறைகளை கையாளுகிற பாத்திரத்துக்கு ஒருவர் தேவைப்பட்டார். அப்போது தான் அஜய்கோஷ் என்ற ஒருத்தருடைய புகைப்படம் பார்த்தேன். அவரிடம் பேசும்போது இப்பாத்திரத்துக்கு ஏற்றவர் அவர் தான் என்று முடிவு பண்ணினேன்.

* இப்படத்தின் முதல் பாதி தான் ‘லாக்கப்’ புத்தகத்தை மையப்படுத்தி இருக்கும். இரண்டாம் பாதி வேறு சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இருக்கும். மொத்தமாக பார்ப்பவர்களுக்கு ‘விசாரணை’ ஒரு புது அனுபவமாக இருக்கும்.

* வெனிஸ் திரைப்பட விழாவில் முதல் 10 படங்கள் வரிசையில் 4வது இடத்தில் ‘விசாரணை’ படத்தை வைத்திருந்தார்கள். அதுமட்டுமன்றி, அனுராக் கஷ்யாப்பின் 2015 ஆண்டின் பிடித்த 10 இந்திய படங்களில் இப்படம் முதல் இடத்தை பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.

* இப்படத்தின் படப்பிடிப்பில் நாயகனுக்கும் மற்ற நடிகர்களூக்கும் நிறைய காயங்கள் ஏற்பட்டது. சேற்றில் எல்லாம் இறங்கி வேலை செய்ய வேண்டியதிருந்தது. அதை முகம் சுளிக்காமல் செய்தார்கள்.

* இப்படத்தின் சென்சாரைப் பொருத்தவரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு படத்துக்கு எது அவசியம்னு அவங்களுக்கு தெரியும். ஒரே ஒரு காட்சியை நீக்கச் சொன்னது மட்டும் கடினமாக இருந்தது.

இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.