டெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்?: விழுப்புரம் காவல் துறை விளக்கம்!

தனக்கு கொரோனா தொற்று இருப்பதை கைது செய்யும் வரை அறியாத டெல்லி இளைஞர் நிதின் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது ஏன் என்பதற்கு விழுப்புரம் மாவட்டக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி பட்டேல் நகரைச் சேர்ந்த நிதின் ஷர்மா (30) என்ற இளைஞர், கடந்த 6-ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை முடிந்து, ‘கொரோனா தொற்று இல்லை’ என கடந்த 7-ம் தேதி இரவு நிதின் ஷர்மாவை சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் நள்ளிரவில் வந்த சோதனை அறிக்கையில் நிதின் ஷர்மாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் விழுப்புரம் மேற்கு போலீஸாரிடம் புகார் அளித்தார். நிதின் ஷர்மாவைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை முதல் சென்னை வரை புறவழிச்சாலையில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணுடன் காவல்துறை சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட லாரி ஓட்டுநர் ஒருவர் கொடுத்தத் தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸார் செங்கல்பட்டு அருகே படாளம் என்ற இடத்தில் உள்ள லாரி நிறுத்துமிடத்தில் தங்கியிருந்த நிதின் ஷர்மாவைக் கைது செய்தனர். மேலும், அவருடன் தங்கியிருந்த 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா சோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கைது செய்யப்படும் வரை தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறியாத நிதின் ஷர்மா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது ஏன் என  விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாரிடம் கேட்டபோது, “நிதின் ஷர்மாவை சுகாதாரத்துறை விடுவித்தபோது அவர் கொடுத்த விழுப்புரம் முகவரியில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதனால் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்தார்