”இனிமேல் நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பேன்”: ‘விலங்கு’ பத்திரிகையாளர் சந்திப்பில் விமல்!

ஜீ5 ஓடிடி தளத்தில், வருகிற (பிப்ரவரி 18) ஆம் தேதி வெளியாகிறது ‘விலங்கு’ வெப் தொடர். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விமல், இனியா, முனிஷ்காந்த், பாலசரவணன், ரேஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் இந்த குற்றப்புலனாய்வுத் தொடரை தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய,  ஒளிப்பதிவை தினேஷ் குமார் புருஷோத்தமன் கையாண்டுள்ளார்.

ஏழு எபிசோடுகளாக உருவாகியிருக்கும் ‘விலங்கு’ வெப் தொடர் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விமல், இனியா, முனீஷ்காந்த், பாலசரவணன், இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ், படத்தொகுப்பாளர் கணேஷ், இசையமைப்பாளர் அஜீஷ், தயாரிப்பாளர் மதன் உள்ளிட்டோருடன் ஜீ5 சார்பில் ஷுஜு பிரபாகரன், கௌசிக் நரசிம்மன், லாயிட் ஆகியோரும் பேசினார்கள்.

நடிகர் விமல் பேசுகையில், “உங்களை பல வருடங்களுக்குப் பின் சந்திக்கிறேன். இந்தக் கதை முதலில் சொன்னபோது படமாக இருந்தது ஆனால் கதை சொல்லச் சொல்ல இது பெரியதாக இருந்ததால் எல்லோரும் தொடராக எடுக்கலாம் என்றார்கள். எனக்கும் புதிதாக இருந்தது. நான் ஹீரோ; ஆனால் படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன்.  தயாரிப்பாளர் அண்ணன் பிஸியாக இருந்தவர்; அவரும் படம் இல்லாமல் இருந்தார். ஒரு தோல்விப்படம் கொடுத்தவர் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ். நாங்கள் எல்லோரும் இணைந்து எங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி இந்த தொடரை செய்துள்ளோம். எங்களை நம்பி ஜீ5 இதை முன்னெடுத்துள்ளார்கள். உங்களை ஏமாற்ற மாட்டோம். இந்த தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமேல் நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பேன். என்னுடைய கம்பேக்காக ’விலங்கு’ இருக்கும். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் இந்த தொடர் பிடிக்கும். நன்றி” என்றார்.

நடிகை இனியா பேசுகையில், “ஒரு நல்ல படம் மூலம் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இது எனது முதல் வெப் தொடர். அதுவும் எனது முதல் படத்து ஹீரோவுடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர் சினிமாவை இப்போது சீரியஸாக பார்க்கிறார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. இதில் 9 மாத கர்ப்பிணி பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்காக கொஞ்சம் எடை கூடி நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் வருவது மகிழ்ச்சி. ’விலங்கு’ தொடர் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி” என்றார்.

நடிகர் பாலசரவணன் பேசுகையில், “நான் நடித்த படங்களில் என்னைப் பற்றி எழுதி ஆதரவளித்த பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. ’விலங்கு’ தொடர் எனக்கு முக்கியமானது. பிரசாந்த் பாண்டிராஜ் எனக்கு உயிர் நண்பன், அவனிடம் ’காமெடியனாக நடிக்கிறேன், குணச்சித்திரத்தில் நடிக்க வேண்டும்’ என சொன்னேன். அப்போது தான் இந்தக் கதை சொல்லி இதில் வரும் கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னார். ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய பாத்திரம், என்னை நம்பி கொடுத்த நண்பனுக்கு நன்றி. அதற்கு ஒத்துழைப்பு தந்த மதன் சாருக்கு நன்றி. இந்த தொடரில் எனக்கு ஒரு உறவு கிடைத்துள்ளது. அது விமல் அண்ணன் அவருக்கு நன்றி. ’விலங்கு’ உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்  பேசுகையில், “புரூஸ்லி’ படத்துக்குப் பிறகு 4 வருஷம் நிறைய கஷ்டப்பட்டேன். இந்த கதையை முதலில் ஐயப்பன் அண்ணன் தான் கேட்டார். வேறொரு கதைக்காக போலீஸ் பற்றி விசாரித்து அவர்களை சந்தித்தபோது அவர்கள் சொன்னதை கதையாக எடுக்கலாம் என தோன்றியது. முதலில் படமாக பண்ணலாம் என முடிவு செய்திருந்தோம். பின்னர் கதை பெரியது என்பதால் தொடராக எடுத்துவிட்டோம். திருச்சியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனை செட் போட்டு எடுத்துள்ளோம். எல்லோரும் ’சென்னையில் எடுங்கள்’ என்று சொல்லியும் தயாரிப்பாளர் மதன் ’அங்கு தான் எடுக்க வேண்டும்’ என்றார். அந்த அளவு கதையை நம்பினார். அவருக்கு நன்றி. கௌஷிக் இந்த புராஜக்ட் மீது காட்டிய அக்கறை எனக்கு மகிழ்ச்சியை தந்தது. பாலசரவணன் நான் நினைத்ததை விட அற்புதமாக நடித்துள்ளார். விமல் அண்ணாவுக்கு நான் முதலில் சொன்ன கதை பிடிக்கவில்லை. இந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஓகே சொன்னாலும் இன்னும் சரியாக வரவில்லை என மீண்டும் நடிப்பார். முழுக்க முழுக்க பரிதி கதாபாத்திரமாக மாறியுள்ளார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள். நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் பேசுகையில், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு இது கம்பேக். 3 வருடங்களுக்கு முன் ஆபிஸில் நான் தனியாக இருந்தபோது, ஐயப்பனை அழைத்தேன். அவன் தான் இயக்குனர் பிரசாந்த்தை கூட்டி வந்தார். அவர் சொன்ன கதை நன்றாக இருந்தது. திருச்சியிலேயே ஷூட்டிங் எடுத்துள்ளோம். தொடர் பார்க்கும்போது அது ஏன் என்பது  உங்களுக்குத் தெரியும். பிரசாந்த் ஒரு நல்ல இயக்குநர். நாங்கள் சேர்ந்து படம் செய்தாலும், இல்லை என்றாலும், எங்களுக்குள் இருக்கும் நட்பு தொடர்ந்து இருக்கும். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. விமலை தொடர்ந்து கவனித்து வருகிறேன், என் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருக்கு இந்த தொடர் ஒரு திருப்பு முனையாக இருக்கும். ஜீ5 எனக்கு கிடைத்தது வரம், சிஜு இந்த தொடரில் காட்டிய அக்கறை மிகப் பெரியது. பாலசரவணனை வேறொரு கோணத்தில் இதில் பார்க்கலாம். கணேஷ் அற்புதமாக படத்தொகுப்பு செய்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஒரு அட்டகாசமான ரோலில் நடித்துள்ளார். இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள். நன்றி” என்றார்.

ஐயப்பன் பேசுகையில், “இது முழுக்க முழுக்க ஒரு டீம் ஒர்க் தான். இந்த டீமில், கொரானா தொற்றால் இருவர் இன்று உயிருடன் இல்லை. RNR மனோகர் சாரும், தீபக்கும். அவர்கள் இருவரின் ஆசி கண்டிப்பாக இந்த தொடருக்கு இருக்கும். இந்த தொடர் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கவரும். நன்றி” என்றார்.