“திருட்டு விசிடி தயாரிப்போரை பிடிக்க உதவினால் 1 லட்சம் ரூபாய் பரிசு: விஷால் அறிவிப்பு!

கார்த்திகேயன் வழங்க, மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், விஜய் ஆர்.ஆனந்த் – ஏ.ஆர்.சூரியன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள  படம் ‘விளையாட்டு ஆரம்பம்’. இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார்

‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர்  விஷால், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அருண்பாண்டியன், ஜான் மேக்ஸ், பி.எல்.தேனப்பன், இயக்குனர்கள் பாலா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சாட்டை அன்பழகன், ஷக்தி என்.சிதம்பரம், பிரவீன் காந்த், நடிகர் மன்சூர் அலிகான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் விஷால் பேசியதாவது..

எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரி போவதாக சொல்லிவிட்டு இந்த விழாவிற்கு வந்துவிட்டேன். பெரோஸ்கான் மகன் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு அப்பாவிற்கு தன் மகன் பெரிய ஹீரோ ஆவது ரொம்ப பிடிக்கும் எங்க அப்பாவும் என்னை இப்படிதான் வளர்த்தார். அதனால் தான் இந்த விழாவிற்கு வந்தேன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம்.. தியேட்டரில் படம் ஓடும்போது அதை கேமரா வைத்து காப்பி செய்து திருட்டு வி.சி.டி, பைரஸி தயாரிக்க  வேலை செய்பவர்களை கையும் களவுமாக பிடித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கொடுத்து போலீஸில் எஃப்.ஐ.ஆர் போட உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக தரப்படும்.  இந்த நடவடிக்கையால் திருட்டு வி.சி.டி தயாரிப்பு கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு விஷால் கூறினார்.