பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (டிசம்பர் 15) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஏற்கெனவே நான் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். நம்முடைய தொடர் முயற்சிகளின் விளைவாக, நாடாளுமன்ற மக்களவையில் இதற்கான சட்டவரைவு நிறைவேற்றப்பட்டிருக்கும் முக்கியமான நடவடிக்கையை வரவேற்கிறேன்.

நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் சமூகங்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.